சாத்தான்குளம் கஸ்டடி மரணமும் தங்கக்கடத்தலும் - சிபிஐ விசாரணை கோரிய இரு முதல்வர்கள்
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் எப்படி தமிழ்நாட்டு அரசியலை உலுக்கியதோ அதே போல கேரளாவில் தங்கக்கடத்தல்
சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கிலும் கேரளாவின் தங்கக்கடத்தல் வழக்கிலும் அந்தந்த மாநில முதல்வர்களே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது ஆச்சரியகரமான ஒன்றுதான். ஏனென்றால் மாநில காவல்துறையோ, சிபிசிஐடி போலீசோ விசாரித்து வந்தாலும் அந்த வழக்கில் நியாயம் கிடைக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள்தான் சிபிஐ விசாரணை கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்வார்கள். ஆனால் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் மாநில காவல்துறை சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தமிழக முதல்வரே அறிவித்திருக்கிறார். அதே போல கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கு கொரோனாவை விட அனலைக் கிளப்பி வரும் நிலையில் பினராயி விஜயன் சிபிஐ விசாரணை கோரி கடிதம் எழுதியிருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக புகார் கிளம்பவே சில நாட்களுக்கு முன்பு வந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று சோதனை செய்தனர். அந்த பார்ச்சலில் 30 கிலோ தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதே போல பலமுறை பார்சலை எடுத்துச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதல்வரின் கீழ் இயக்கும் தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளரும், முதல்வர் பினராயி விஜயனின் செயலாளருமான சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று கூறிய முதல்வர் பினராயி விஜயன் தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த ஒரு இடம்.. லடாக்கில் "பிங்கர் -4'' பகுதியில் பின்வாங்காத சீனா.. இந்தியா தீவிர ரோந்து.. பின்னணி!
தங்கம் கடத்தல்
ஜூலை 5 ம் தேதி சுங்க அதிகாரிகளால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுமார் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். பெரிய அளவிலான தங்கத்தை கடத்த முயன்ற சம்பத்தில் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்தது இந்த விஷயத்தை மேலும் தீவிரமாக்குகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு கடுமையான தாக்கத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு பல்வேறு கோணங்களில் முழு விசாரணை நடத்தப்படுகிறது.
குற்றமும் பின்னணியும்
இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மத்திய புலனாய்வு அமைப்புகளும் திறமையான மற்றும் ஒருங்கிணைந்த விசாரணையை மேற்கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது.. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய வேண்டும்.
ஒத்துழைப்பு கொடுப்பேன்
இந்த வழக்கின் விசாரணையில் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், முழு ஒத்துழைப்பும் கேரள மாநில அரசு வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று கடிதம் எழுதியிருக்கிறார் பினராயி விஜயன். எது எப்படியோ சிபிஐ விசாரணை கோரிய எதிர்கட்சியினரின் வாயை பிரதமருக்கு கடிதம் எழுதி அடைத்து விட்டார் பினராயி விஜயன். இனி சிபிஐ தனது புலனாய்வு விசாரணையை தொடங்கினால்தான் தங்கக்கடத்தலில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும்.
தலைமறைவு ஸ்வப்னா
தங்கக்கடத்தலின் சூத்திரதாரியான ஸ்வப்னா தலைமறைவாகி நான்கு நாட்களுக்கும் மேலாகி விட்டது. துணைத்தூதரகம் முதல் அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அலுவலகம் வரை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு பதவியை பிடித்த ஸ்வப்னாவின் கல்வித்தகுதியே கேள்விக்குறியாகி உள்ளது. இப்போது ஸ்வப்னா வெளிநாடும் தப்ப முடியாது ஏனெனில் கொரோனாவினால் விமான போக்குவரத்துக்கு தடை உள்ளது. அவர் கார் மூலம் தமிழ்நாட்டிற்குள் தஞ்சம் புகுந்து தலைமறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அக்னி பரிட்சை
ஸ்வப்னா கைது செய்யப்பட்டால் மட்டுமே இந்த தங்கக்கடத்ததில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று தெரிய வரும். அதுவரை முதல்வர் பினராயி விஜயனுக்கு அக்னி பரிட்சைதான். இந்த சோதனையில் இருந்து மீண்டு தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பினராயி விஜயன்.
சிபிஐ விசாரணை சாத்தான்குளம் மரண வழக்கு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்நிலையத்தில் விசாரணையின் போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த வழக்கை ஹைகோர்ட் உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரித்து இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. விசாரணை விறுவிறுப்பான நடைபெற்று வந்த நிலையில் சிபிஐ போலீசும் முறைப்படி வழக்குப் பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
சந்தேக மரணம்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, டெல்லி சிபிஐ-க்கு உடனடியாக மாற்றப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் டெல்லி சிபிஐ தனியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் எம்.சங்கர் கொடுத்த புகார் அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சிபிஐயும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. சந்தேகக் குற்றங்கள் என்ற தலைப்பில் சட்டவிரோதமாக சிறை வைப்பு, கொலை, சாட்சிகளை அழித்தல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகளுக்கு தண்டனை
சிபிஐ விசாரணையின் அடிப்படையில் தான் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது. சிபிஐ சார்பில் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். கொரோனா காலத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த இருவரின் மரணம் அரசுக்கு சரியான தலைவலியை ஏற்படுத்தி விட்டது. இந்த வழக்கில் உண்மையான விசாரணை நடைபெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை விரைவாக கிடைத்தால் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கும் அவரது தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறைக்கு ஏற்பட்டிருந்த களங்கம் நீங்கும் என்று தெரிகிறது.