பத்திரிகைகளுக்கு நன்றி.. இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை.. ரஜினியின் திடீர் கருத்து.. பின்னணி இதுதான்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் காரணம் இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதை ஏன் நீங்கள் இப்போது கூறுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?
Recommended Video
ரஜினிகாந்த், நேற்று முன்தினம் டுவிட்டரில், திடீரென ஒரு மெசேஜ் வெளியிட்டார் ஞாபகம் இருக்கிறதா? கண்டிப்பாக அதன் பின்னணியிலும் இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள்.
ரஜினிகாந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவு என்ன என்று ஞாபகம் இருக்கிறதா? இதோ இதுதான், அந்த ட்வீட்:
டுவிட்டர் பதிவு
அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை, என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த, ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 🙏🏻 இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
முதல் முறை
இவ்வாறு ரஜினிகாந்த் நன்றி தெரிவிப்பதற்கான அவசியம் இதற்கு முன்பு எப்போதும் இருந்தது கிடையாது. இதற்கு முன்பும் எத்தனையோ பேட்டிகள் அளித்துள்ளார். அவரது வீட்டு வாசலில் வைத்து தான். அல்லது ஏர்போர்ட்டில் வைத்து கொடுப்பார். தனது பேட்டியை தவறாக ஒளிபரப்பி விட்டார்கள் என்று அவர் பத்திரிக்கையாளர்கள் மீது வருத்தப்பட்டு மறுபடியும் பேட்டி கொடுத்துள்ளாரே தவிர நன்றி தெரிவித்த வரலாறு கிடையாது. முதல்முறையாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
கேள்வியே இல்லை
விஷயம் இதுதான்: எப்போதுமே போயஸ்கார்டனில் தனது இல்லத்திற்கு வெளியே வைத்து நிருபர்களை சந்திப்பார் ரஜினிகாந்த். இதுவே அவருக்கு எதிராக விமர்சனங்களாக எழுந்தது. இந்த நிலையில்தான், ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரஸ் மீட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால் வந்தார்.. மேடையில் தோன்றினார்.. தான் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லிவிட்டு, "நான் எந்த கேள்வியையும் எதிர் கொள்ளப் போவதில்லை. அப்படி எதிர்கொண்டால் நான் கூற வந்த கருத்து திரிந்து போய்விடும்" என்று கூறி விட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.
வீடியோ போட்டிருக்கலாமே
இது பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வீடியோவை தயாரித்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு என்று அழைத்துவிட்டு, கேள்விகளை எதிர்கொள்ளாமல் செல்வது பத்திரிக்கையாளர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கூறியது பார்க்க முடிந்தது.
கூல்
இந்த நிலையில்தான் தனது கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி என்று ஒரு லிட்டர் பதிவை வெளியிட்டு அவர் பத்திரிகையாளர்களை கூல் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். பத்திரிகையாளர் சந்திப்பு என்று அழைத்துவிட்டு பேட்டி கொடுக்க மாட்டோம் என்பதை முன்பே முடிவு செய்து, ரஜினிகாந்த் இப்படி செய்தது, தவறான முன்னுதாரணம் என்பதை அப்போதே ஏன் யோசிக்க வில்லை என்பதுதான் புரியவில்லை.
அரசியலுக்கு வருவதே சந்தேகம்
ரஜினிகாந்தின் இந்த ட்விட்டர் பதிவுகள் பின்னணியில் இன்னொரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால், அரசியல் புரட்சி வந்தால்தான், நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினிகாந்த் கூறியதை வைத்து, 'ரஜினிகாந்த் இனிமேல் அரசியலுக்கு வருவது சந்தேகம். அதை தான் இப்படி சுற்றிவளைத்து சொல்கிறார்' என்று பல பத்திரிகையாளர்களும் விளக்க உரை தந்தனர். சமூக வலைத்தளங்களிலும் ரஜினிகாந்தின் இந்த பேச்சு கடும் கேலி கிண்டலுக்கு உள்ளானது. ரசிகர்கள் பலரும் கூட அதிர்ச்சியடைந்தனர்.
நம்பிக்கையூட்டும் செயல்
இந்த நிலையில்தான், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்ற தனது கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த். அரசியல் மாற்றம் என்பதைத்தான் தான் வலியுறுத்திக் கூறினேன், அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது அதன் உள்ளர்த்தம் கிடையாது என்பதை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் புரிய வைப்பதற்காக ட்வீட்டரில் இப்படி ஒரு வார்த்தையை அவர் சொல்லியுள்ளார். இதன்மூலம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை இன்னமும் அவர் தக்க வைத்துள்ளார். எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளார். சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்கிறார் ரஜினி, எனவே அவர் அரசியலுக்கு வந்து விடுவார் என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தவும் இந்த வார்த்தை பயன்படும். ஒரே ட்வீட்டில் இரண்டு தரப்புக்கு செல்லவேண்டிய மெசேஜ்களை அவர் சொல்லியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.