தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும் தான்... ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம்
சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இருமொழிக் கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கஸ்தூரி ரங்கன் குழு தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் ஒப்படைத்தது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழி கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பக்கம் வந்தீங்க.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க.. காளியம்மாள் ஆவேசம்!
இரு மொழிக்கொள்கை தான்
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு இருமொழி கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும். இரு மொழிக்கொள்கை தான் அதிமுக அரசின் உறுதியான கொள்கை முடிவு என்றார்.
புதிய கல்விக் கொள்கை
இதற்கிடையே, தமிழகத்தில் பின்பற்றப்படும் இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை என்றும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேன்கூட்டில் கல்வீச வேண்டாம்
இதே போல், பள்ளிக் கல்வியில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல்வீச வேண்டாம் என்றும்,
ஸ்டாலின் எச்சரிக்கை
கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மும்மொழிக் கொள்கை பேராசைக்கனவும் அதற்காகப் பிழையான காரியமும் அவர்களுக்குப் பேரிடரை ஏற்படுத்திவிடும் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மொழி திணிப்பு இல்லை
யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மேலும், இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தற்போது வெளியாகி இருப்பது வரைவு அறிக்கை மட்டுமே; மக்களின் கருத்துகளை கேட்டபிறகே முடிவு எடுக்கப்படும் என்றார்.