பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்காததால் நீதிமன்றத்ததில் மன்னிப்பு கோரிய ஆர்.டி.ஓக்கள்
சென்னை: பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்காத ஆர்.டி.ஓ'க்கள் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதால் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றது.
தர்மபுரி மாவட்டம் சின்ன காணஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது குழந்தைகளுக்கு பழங்குடியினர் பிரிவு சான்றிதழ் கோரி தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த விண்ணபம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர், மாநில அளவிலான பரிசீலனை குழுவுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அந்தக் குழு அவர்களை, பழங்குடியினர் என உறுதி செய்து ஜெயலட்சுமியின் குழந்தைகளுக்கு, சான்றிதழை வழங்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால் பழங்குடியினர் சான்றிதழ் அவருக்கு வழங்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 11 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ஆர். சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிகாரிகளில் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில குழு பரிந்துரைத்த பிறகு கூட சாதி சான்றிதழ் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
சாதி சான்றிதழ் கேட்டு ஜெயலட்சுமி விண்ணப்பிக்கும் போது பணியில் இருந்த ஆர்.டி.ஓ மற்றும் தற்போதைய ஆர்.டி.ஓ ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். மேலும், சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் போது பணியில் இருந்த ஆர்.டி.ஓ தேன்மொழிக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் இன்று 1,843 பேருக்கு கொரோனா- முதல் முறையாக ஒரே நாளில் 44 பேர் மரணம்
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்ப்ரென்ஸ் மூலம் ஆஜரான இரண்டு அதிகாரிகளும் நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினர்.
மேலும், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி ஜெயலட்சுமியிடம் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்தனர்.
தனக்கு விதிக்கப்பட்ட அபராத உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஆர்.டி.ஓ தேன்மொழியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அவருக்கு விதிக்கப்பட்ட
அபராத உத்தரவை திரும்ப பெற்றனர்.