டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் - சிக்கலில் இரு தமிழக உயர் அதிகாரிகள்?
சென்னை: பாலியல் புகார் அளிக்கப்பட்ட டிஜிபி ராஜேஷ் தாஸ் சார்பாக, இரு தமிழக உயரதிகாரிகள், புகார் கொடுப்பதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக, டிஜிபி ராஜேஷ் தாஸ் குறித்து, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார்.
புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் இந்த பாலியல் தொல்லை நேர்ந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்து வழக்குத் தொடராமல் பாதுகாக்க நினைத்தால் திமுக மாபெரும் போராட்டத்தில் இறங்கும்" என்று எச்சரித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க, விசாகா கமிட்டி குழு அமைத்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்காக, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவில், சீமா அகர்வால் ஐபிஎஸ், அ.அருண் ஐபிஎஸ், ப.சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ், வி.கே.ரமேஷ் பாபு, லொரேட்டா ஜோனா ஆகிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த சூழலில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அப்பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் கொடுக்க சென்ற போது, இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளால் தடுத்த நிறுத்த முயற்சி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தி நியூஸ் மினிட்செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்தியில், "பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் கொடுக்க முற்பட்ட போது, அவரை பிற ஐபிஎஸ் அதிகாரிகள் பலமுறை தடுத்தது தெரிய வருகிறது. குறிப்பாக, ஒரு மூத்த அதிகாரியும், அப்பெண் ஐபிஎஸ் அதிகாரி பேட்சை சேர்ந்த மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியும் புகார் கொடுக்கக் கூடாது என கடுமையாக எச்சரித்ததோடு, உடல் ரீதியாகவும் மல்லுக்கட்டியதாக தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
ஐபிஎஸ் சங்க வட்டார தகவலின் படி, ஐஜி நிலை அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் ராஜேஷ் தாஸ் மீதான புகாரின் சட்டபூர்வமான விளைவுகளிலிருந்து பாதுகாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்பெண் ஐபிஎஸ் அதிகாரியின் வாகனம் மற்றொரு அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த குறிப்பிட்ட அதிகாரி, அப்பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை எடுக்க தனது பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டதாகவும், புகார் அளிக்க செல்ல வேண்டாம் என்று கூறியதாகவும் அந்த செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.