இனி உதயநிதிதான் தளபதியாம்.. அப்படித்தான் அழைக்க வேண்டுமாம்.. வாய்மொழி உத்தரவாம்!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தலைவர் என்றும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தளபதி என்றும் அழைக்க வேண்டும் என்று திமுகவினருக்கு வாய் மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாம்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைத்ததில் உதயநிதியின் பங்கு ரொம்ப முக்கியமானது என்று கூறி இந்த பதவி வழங்கப்பட்டது.
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக மீதும், ஆட்சியாளர்கள் மீதும் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக திமுகவுக்கு மரியாதையும் ஆதரவும் கூடியது. இதுவே கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியை தேடித்தந்தது.
இந்நிலையில் திடீரென்று இளைஞர் அணி செயலாளர் ஆக இருந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் திடீர் என்று "தானாக முன் வந்து" தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது. இதை உடனடியாக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவரும் "நம்பிவிட்டனர்". ஆகவே காலியாக இருந்த இளைஞர் அணி பதவிக்கு தமிழகம் முழுவதும் இருந்து வந்த தீர்மானங்களின் அடிப்படையில் உதயநிதி உடனடியாக இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு கொண்டு வரப்பட்டார்.
இப்படி உதயநிதி ஒரே இரவில் "ஒபாமா"ஆக்கப்பட்டது திமுகவினருக்கே பிடிக்கவில்லை. ஆங்காங்கே விமர்சனக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் கேட்க தொடங்கியது. சில தொலைகாட்சி விவாதங்களில் திமுகவினர் கடுமையாக இதற்கு முட்டுக் கொடுத்து பேசிவந்தாலும் பொதுமக்கள் மத்தியில் திமுக மீது ஏற்பட்டு வந்த மரியாதையை சற்று கீழிறக்கி உள்ளது என்பதுதான் எதார்த்தம்.
முன்பு கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டபோது அது பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. . திமுகவுக்கு ஸ்டாலின் பொறுப்பேற்றது அனைத்து தரப்பினருக்கும் நியாயமான ஒரு செயலாகவே பட்டது. இன்னும் சொல்லப் போனால் கருணாநிதி உயிரோடு இருந்தபோதே ஸ்டாலினுக்கு தலைவர் பதவியையும், சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராகவும் அறிவித்திருக்க வேண்டும் என்ற குரல்களே தொடர்ச்சியாக கேட்டு வந்தன.
அவருக்கு தலைவர் பதவி மிகத் தாமதமாகவே கிடைத்தது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. ஆனால் உதயநிதிக்கு உடனடியாக பதவி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலைமை இப்படி நீடிக்கையில், திமுக உடன்பிறப்புகள் உட்பட பலரும் ஸ்டாலினை இப்போதும் தளபதி என்றே அழைத்து வருகிறார்கள். உதயநிதியை பெயர் சொல்லியே அழைத்து வருகிறார்கள். இதை ஸ்டாலின் குடும்பத்தினர் ரசிக்கவில்லையாம்.
கருணாநிதியை, கலைஞர் என்றும், பொது செயலாளர் அன்பழகனை இனமானப் பேராசிரியர் என்றும், ஸ்டாலினை தளபதி என்றுமே அவர்களது பெயர்களை கூறாமல் அடைமொழி வைத்தே கட்சியினர் அழைத்து வந்தனர். ஆனால் இப்போது உதயநிதியை மட்டும் பெயர் சொல்லி அழைப்பது சரியாக இல்லையென்று ஸ்டாலின் குடும்பத்தினர் கருதுகிறார்கள். மேலும் சென்டிமென்ட்படியும் உதயநிதியை பெயர் சொல்லி கூப்பிடுவதை அவர்கள் விரும்பவில்லை.
எனவே இனிமேல் நோட்டிஸ்களிலோ பேனர்களிலோ ஸ்டாலின் பெயரை அச்சிடும்போது தலைவர் என்றும், உதயநிதியை தளபதி என்றுமே அச்சிடவேண்டும் அவ்வாறே அழைக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். இன்னும் நிறைய இருக்கும் போலயே...!