கிடா கறியுடன் கிண்டியில் உதயநிதி கொடுக்கும் "மாப்பிள்ள - மச்சான் விருந்து"!
Recommended Video
சென்னை: சாதாரண சாரப்பாம்பு! என்றுதான் உதயநிதி ஸ்டாலினை நினைத்தனர் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் சீனியர்கள். ஆனால் பையனோ 'நான் கிங் கோப்ராடா!' என்று அடித்து அந்தர் பண்ணத் துவங்கிவிட்டார் கட்சியில். ஸ்டாலினே எதிர்பாராத வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க.வின் தவிர்க்க முடியாத சக்திதான் இளைஞரணி. மற்ற அணிகள் போல் இது ஒரு சார்பு அணியாக இல்லாமல், கட்சியை தூக்கி நிறுத்தும் ஆணிவேர் அணியாக மாறியது ஸ்டாலினால். திருச்சியில் ஸ்டாலின், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, அன்பில் பொய்யாமொழி உள்ளிட்டோர் இளைஞர்களாக இருக்கும்போது துவக்கப்பட்டது இந்த அணி. கிட்டத்தட்ட மிலிட்டரி கட்டுப்பாட்டோடு இயங்கக் கூடியது.
தி.மு.க. கடும் சோதனையை சந்தித்தபோது இந்த அணிதான் அதிதீவிரமாக உழைத்து, மீண்டும் கட்சி, ஆட்சியை பிடிக்க உதவியது. அதனால்தான் 'தி.மு.க.வின் முதுகெலும்பே' என அவ்வணியை விளித்தார் கருணாநிதி. அப்பேர்ப்பட்ட இளைஞரணியின் மாநில செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதனை நியமித்த ஸ்டாலின் அதிலிருந்து தான் பதவி விலகி திமுக பொருளாளர் ஆனார்.
சரிப்பட்டு வராத சாமிநாதன்
சாமிநாதனோ அப்பதவிக்கு பெருமை தேடித் தரவில்லையென்றாலும் பரவாயில்லை, அந்த பதவியால் தனக்கு பெருமை வருமளவு கூட எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மிக சூப்பராக பிரசாரம் செய்து, கழக வெற்றிக்கு தோள் கொடுத்த தனது மகன் உதயநிதியை அவ்வணிக்கு மாநில செயலாளர் ஆக்கினார். பதவியேற்றதும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஒரு சம்பிரதாய கூட்டம் போட்டார் உதயநிதி. அப்போது "விரைவில் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடுவோம்." என்றார்.
விருந்து ரெடிங்கண்ணா
இதனை ‘வழக்கமா பதவிக்கு வருவோர் சொல்லும் டயலாக்தான்!' என்று நினைத்தனர் கட்சியினர். ஆனால் அவர்களெல்லாம் விக்கித்து நிற்கும் வண்ணம், இதோ வரும் 25-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஒரு மெகா விருந்துடன் இளைஞரணியின் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் உதயநிதி.
கிடா விருந்து
இந்த நிகழ்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள உதயநிதி "தி.மு.க. இளைஞரணியின் மாவட்டம், மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் வரும் 25-ல் நடைபெறுகிறது." என்று கூறி அவர்களை அழைத்துள்ளார். தடல்புடலான மதிய உணவுடன் இந்த கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் கொங்கு மண்டலம் ஸ்டைல் ‘மாப்பிள்ளை, மச்சான் கிடா விருந்து வழங்கப்பட இருக்கிறது' என்கிறார்கள்.
மாப்ளே மச்சான்
அது என்ன மாப்பிள்ளை மச்சான் கிடா விருந்து?.... இங்கதாங்க.. நீங்க ரொம்பக் கவனமா படிக்கணும்.. அதாவது கொங்குமண்டலம் என்று அழைக்கப்படும் மேற்கு தமிழகத்தில் விவசாயமும், செழிப்பும் அதிகம். அதனால் இளைஞர்களும், நடுத்தர வயது ஆண்களும் சாதி, சமுதாயம் பார்க்காமல் மிக ஜாலியாக பழகுவார்கள். அடிக்கடி டூர் போடுவது, ஊருக்கு வெளியே கூடி கும்மாளம் போடுவது என்று இருப்பார்கள். அவர்களுக்குள் சீனியர்களை ஜூனியர்கள் ‘மாமா, மச்சான்' என்றழைக்க, ஜூனியர்களை சீனியர்களோ ‘மாப்ள' என்று அழைத்துத்தான் பேசிக்கொள்வார்கள்.
கலகல சாப்பாடு
அந்த டீமில் புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்ட பையனில் இருந்து, புது மொபைல் வாங்கிய சீனியர் வரை எதற்கெடுத்தாலும் கிடா வெட்டி பார்ட்டி கொடுப்பது வழக்கம். இதைத்தான் ‘மாப்பிள்ளை, மச்சான் கிடா விருந்து' என்று சொல்கிறார்கள். முழு ஆட்டை வெட்டி, காரசாரமாக சமைத்து கலகலவென சாப்பிடுவார்கள். இப்படியொரு விருந்தைத்தான் உதயநிதி தர இருக்கிறாராம்.
விறுவிறுப்படையும் பணிகள்
கொங்கு மண்டலத்தால்தான் கடந்த முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பை சின்ன இடைவெளியில் இழந்தது தி.மு.க. அதிலிருந்து கொங்கு மண்டலத்தில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஸ்டாலின். இந்த நிலையில் உதயநிதியும் கொங்கு ஸ்டைலில் இப்படி விருந்தும், ஆலோசனை கூட்டமும் நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்துக்குப் பின் தமிழகம் முழுக்க தான் சுற்றுப்பயணம் வர இருப்பதையும், எப்படி சந்து பொந்துகளிலும் இளைஞரணியினர் கட்சியை வளர்க்க வேண்டும்! என்பதையும் அவர்களுக்கு விளக்க இருக்கிறாராம்.
சரி, இளைஞரணியில் உதயநிதி மச்சானா இல்ல மாப்ளேயா?!
- ஜி.தாமிரா