உதயமானது இன்னொரு "சூரியன்".. திமுக இளைஞர் அணி இனி உதயநிதி வசம்!
Recommended Video
சென்னை: தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவின் இளைஞரணி செயலாளராக, அக்கட்சி தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்
திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார் கட்சி பத்திரிகையான முரசொலியின் நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, முதல் முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. போட்டியிட்ட ஒரு தொகுதியை தவிர்த்து, எஞ்சிய மக்களவை தொகுதிகள் அனைத்திலும் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் 13 இடங்களை வென்றது.
ஆட்சியை கைப்பற்ற முடியாவிட்டாலும் இடைத்தேர்தல் முடிவுகள் எப்போதும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பை, பொய்க்க வைத்துள்ளது திமுக. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டாலும், திமுகவின் மக்களவை மற்றும் பேரவை தேர்தல் வெற்றியே பெரிதும் பேசப்பட்டது.
கருணாநிதி மறைந்த பின் சந்தித்த தேர்தல்கள் என்பதால், ஸ்டாலினின் தலைமை குறித்த எதிர்பார்ப்பும் எகிறியிருந்தது. அவர் தலைமையை மக்கள் ஏற்று கொண்டுள்ளனர் என பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் தேர்தல் முடிவுகளுக்கு பின் கருத்து தெரிவித்தனர். இந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது திமுக சார்பாக, ஸ்டாலினின் மகனான உதயநிதியும் களப்பணிகளில் களமிறங்கினார்.
தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிக்கெல்லாம் சென்று மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி. பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு மற்றும் மத்திய பாஜக அரசை மிகவும் காட்டமாக விமர்சித்து பேசினார்.
அவரது காரசாரமான பேச்சு பிரச்சாரத்தில் பங்கேற்ற மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் உதயநிதியின் பிரச்சார பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் உதயநிதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்து மக்களவையில் சுமார் 38 உறுப்பினர்களை திமுக கூட்டணி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் உதயநிதி கட்சிக்காக ஆற்றிய களப்பணியை பார்த்த திமுக மூத்த தலைவர்கள், கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாமலேயே இவ்வளவு கடும் உழைப்பை கொட்டியுள்ளார் உதயநிதி.
எனவே எதிர்வரும் காலங்களில் அவர் மேலும் சிறப்பாக செயல்பட அவருக்கு நல்லதொரு கட்சி பொறுப்பை வழங்க வேண்டும் என ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் .மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது மகன் ஸ்டாலினுக்கு முதன் முதலாக திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுத்தார்.
அந்த வழியில் உதயநிதிக்கும், அவரது தந்தையும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் பட்சத்தில் இளைஞர்களையும் அவர்களது வாக்குகளையும் திமுகவின் பக்கம் ஈர்க்க முடியும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து நீண்ட யோசனை மற்றும் ஆலோசனைக்கு பிறகு தன் மகன் உதயநிதிக்கு, கட்சியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பான இளைஞரணி செயலாளர் பதவியை அளிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது
மேலும் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று நியமிக்கப்பட கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக திமுகவில் கட்சி பொறுப்பில் இணைந்துள்ளார்.