கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை... உதயநிதி ஸ்டாலின் 100 நாள் பிரச்சாரப் பயணம்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு குறையாமல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் பயண ரூட் மேப் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவை எல்லாம் விட்டுத் தள்ளு.. தீபாவளியை கொண்டாடிய தமிழகம்- தேனியில் மோதல்- ஒருவர் பலி
தேர்தல் திருவிழா
ஜனநாயகத்தின் திருவிழாவாக கொண்டாடப்படும் தேர்தல் வரவுள்ளதால் தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே அதனை ஆவலோடு எதிர்நோக்க தொடங்கியுள்ளன. பாஜக வேல் யாத்திரை என்ற பெயரில் பரப்புரையை தொடங்கி நடத்தி வருகிறது. காங்கிரசும் பிரச்சாரப் பயணத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே திருப்பூரில் தொடங்கிவிட்டது. அதிமுகவும் போஸ்டர் பிரச்சாரம் நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக மக்கள் சந்திப்பை முன்னெடுக்க உள்ளது.
100 நாள் பயணம்
வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக நிற்கும் திமுக, பிரச்சாரப் பயணத் திட்டங்களை தயார் செய்து வருகிறது. அதனடிப்படையில் முதற்கட்டமாக உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒரு விசிட் அடிக்கவிருக்கிறார். அவ்வாறு அவர் செல்லும் போது கட்சியினரை மட்டும் சந்திக்காமல் பொதுமக்கள் சந்திப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார். சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு மினி நமக்கு நாமே நிகழ்ச்சியாக இருக்கவிருக்கிறது.
அனைத்து தொகுதி
அடுத்த மாதம் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார பயணத்தை தொடங்குவார் எனத் தெரிகிறது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் காலடி படாத இடமே இருக்கக்கூடாது என்கிற வகையில் சூறாவளிச் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடக் கூடும் என உத்தேசிக்கப்படும் தொகுதிகளுக்கும் செல்லவிருக்கிறார்.
கலைஞரை போல்
செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் பிரச்சாரத்தின் போதும் டைமிங்காக பேசி கருணாநிதி கைதட்டல்களை அள்ளுவார். அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் பல நேரங்களில் மேடைப்பேச்சின் போதும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவரது தாத்தா பாணியில் ஹுயூமர் சென்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் அவர் மேற்கொள்ளும் பிரச்சாரமும் திமுகவுக்கு நன்மை பயக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இளைஞரணியினர்.