"பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.. இன்னும் 5 மாசம்தான்".. பகீரை கிளப்பும் திமுக பேச்சு.. இது சரியா?
திமுகவின் வன்முறை பேச்சு கண்டு பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்
சென்னை: இன்னும் குழந்தையே பிறக்கல.. அதுக்குள்ள திமுக பேர் வெக்க ஆரம்பிச்சிடுச்சே என்ற முனகல் எழுந்து வருகிறது... இதற்கு காரணம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான் என்பதுபோல மிரட்டல் தொனியில் திமுக தலைவர்கள் தொடர்ந்து பேசிவருவதுதான், மக்களை அதிர வைத்து வருகிறது.
சமீபத்தில் நாகையில் பிரச்சாரத்துக்கு சென்ற திமுக இளைஞரணி செயலர் உதயநிதி, கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது, "'அவரு தான், ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ்.. பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.. இன்னும் 5 மாசம்தான் இருக்கு... எங்களுக்கு தெரியாத காவல் துறையா.. நாங்க பார்க்காத காவல்துறையா...' என்று பேசியிருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சு, சோஷியல் மீடியாவிலும் வைரலானது.. உதயநிதியின் பேச்சை கண்டு பலரும் மிரண்டனர்.. குறிப்பாக காவல்துறையை அதிருப்தி அடைந்தது.. இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் மற்றொரு பிரச்சனை தலைதூக்கி வருகிறது.. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொன்னேரியில் நடந்தது.
பகீர் பேச்சு
அதில், மாவட்ட பொறுப்பாளர் டிஜே கோவிந்தராஜன் பேசும்போது, "திமுக ஆட்சிக்கு வந்தால், நாம் சொல்பவர் தான் தாசில்தார்.. வட்டார வளர்ச்சி அதிகாரி... நாங்கள் கை காட்டுபவர்கள் தான், சப் - இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், டிஎஸ்பியாக நியமிக்கப்படுவர்.
வைரல் பேச்சு
தொண்டர்களுக்கு என்ன பிரச்னையாக இருந்தாலும், நாம் போட்ட அதிகாரிகள் தான்.. அவர்கள் நமக்காக செயல்படுவர்" என்று பேசியுள்ளார்.. இந்த பேச்சும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உடன்பிறப்புகளுக்கு இந்த பேச்சு, புதிய உத்வேகத்தையும், குஷியையும் தந்தாலும், பரவலாக யாரும் இந்த அணுகுமுறையை ரசிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம், திமுக தலைவர் ஸ்டாலின் இப்படி ஒருநாளும் பேசியது கிடையாது.
முக ஸ்டாலின்
யாரை விமர்சித்தாலும் நாகரீக வார்த்தைகளையேதான் பயன்படுத்துவார். ஒருபோதும் அவரது விமர்சனம் எல்லை மீறியதும் இல்லை.. ஆனால், உதயநிதி உட்பட பலரும் இப்போது தடித்த வார்த்தைகளை மிரட்டல் தொனியில் பேசி வருவது வருத்தமாக உள்ளது.. ஏற்கனவே திமுக ஒரு ரவுடி கட்சி, வன்முறைக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வரும்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசிவருவது திமுகவுக்குதான் இழுக்கு.
நாற்காலி
முக்கியமாக, திமுகவை ஆட்சிப்பீடத்தில் ஏற்றவும், கருணாநிதியை முதலமைச்சராக நாற்காலியில் அமர வைக்கவும், லட்சக்கணக்கான திமுகவினர், தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியுள்ளார்கள். 60 ஆண்டு காலத்திற்கு மேலாக திமுகவை பாதுகாக்கவும், அதனை ஆட்சி பீடத்தில் அமர்த்தவும் கருணாநிதி அர்ப்பணித்த உழைப்பும் தியாகமும் அளப்பரியது. எத்தனையோ சோதனைகளையும், அடக்குமுறைகளையும், அவதூறுகளையும், பழிகளையும் தாண்டி கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்த வந்த கருணாநிதி வகுத்த பாதை, தற்போது மாறிவிடக்கூடாதே என்பதே நம்முடைய உளக்குமுறலாக உள்ளது!
மறுக்க முடியாது
சமீப காலமாக, உதயநிதியின் வருகை இளைஞர்களுக்கு ஒரு எழுச்சியை உண்டு பண்ணி வருகிறது.. அதை மறுக்க முடியாது.. உதயநிதியின் பேச்சு, தொண்டர்களுக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சுவது போல இருக்கிறது.. அதையும் மறுக்க முடியாது.. மிக குறுகிய காலத்தில் உதயநிதியின் விஸ்வரூபம் மலைக்க வைத்தும் வருகிறது.. அதையும் மறுக்க முடியாது.. ஆனால், எப்போதாவது இப்படி தடித்த வார்த்தைகளை உதிர்க்கும்போதுதான், சோஷியல் மீடியாவில் அது பெரிதாக்கப்பட்டு விடுகிறது.. முக்கியமாக, எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு எந்த இடமும் தரப்படாமல் இருந்தாலே அது திமுகவுக்கு மேலும் சிறப்புதான்!