திமுக இளைஞரணியில் 7 மண்டலங்களுக்கும் பொறுப்பாளர்கள்..!
சென்னை: திமுக இளைஞரணியை 7 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பொறுப்பாளர் என்ற வீதம் 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவில் உள்ள 16 அணிகளில் முதன்மையான அணி என்றால் அது இளைஞரணி. மகளிர் அணி, மாணவர் அணி உட்பட ஏனைய அணிகள் எல்லாம் இதற்கு அடுத்த இடத்தில் தான் இருக்கின்றன.
காரணம் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்தது தான். அந்த இடத்தில் இப்போது உள்ள உதயநிதி ஸ்டாலின் தன் தந்தையை விஞ்சும் வகையில் இளைஞரணியை மெருகேற்றி வருகிறார். அந்த வகையில் இளைஞரணிக்கு அவர் நியமித்துள்ள பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு;
ஆஹா.. இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகனச்சட்டம்.. தண்டனை, அபராதம் பல மடங்கு ஜாஸ்தி
மண்டலம் 1
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களை மண்டலம் 1 எனப் பிரித்து அதற்கு தென்மாவட்டத்தை சேர்ந்த இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலை உதயநிதி பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்.
மண்டலம் 2
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளை மண்டலம் 2-ஆக பிரித்து அதற்கு பெரம்பூர் எம்.எல்.ஏ.வும், இளைஞரணி துணைச் செயலாளருமான ஆர்.டி.சேகர் பொறுப்பாளராக போடப்பட்டுள்ளார்.
மண்டலம் 3
மத்திய மண்டலமான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கோவையை சேர்ந்த இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மண்டலம் 4
கொங்கு மண்டலமான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், ஆகிய மாவட்டங்களின் பொறுப்பை தனது ஆருயிர் நண்பர் அன்பில் மகேஷிடம் உதயநிதி வழங்கியிருக்கிறார்.
மண்டலம் 5
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்கு அசன் முகமது ஜின்னார் பொறுப்பாளர்.
மண்டலம் 6
பெரம்பலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களை 6வது மண்டலமாக பிரித்து அதற்கு துரை என்பவர் பொறுப்பாளராக போடப்பட்டுள்ளார்.
மண்டலம் 7
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தின் ஒரு பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.