குறுக்கு வழி வேண்டாம்... வரிசையிலேயே நின்று கொள்கிறேன் -உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திமுக செயற்குழு அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் வரிசையில் நின்று கையெழுத்திட்டு விட்டு கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் சென்றார்.
அப்போது, ஏற்கனவே வரிசையில் நின்று கொண்டிருந்த செயற்குழு உறுப்பினர்கள் உதயநிதிக்கு வழிவிட்டு ஒதுங்க, அவரோ குறுக்கு வழி வேண்டாம் வரிசையிலேயே நின்றுகொள்கிறேன் எனக்கூறி பெருந்தன்மை காட்டினார்.
மேலும், அவருடன் வந்திருந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் அன்பில் மகேஷ், பைந்தமிழ் பாரி, அசன் முகமது ஜின்னா ஆகியோரும் வரிசையில் நின்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை... தமிழகம் 2-வது இடம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
அண்ணா அறிவாலயம்
திமுக செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் 8.30 மணி முதலே இருக்கையை பிடிப்பதற்காக உறுப்பினர்கள் கூட்ட அரங்கிற்கு வருகை தர தொடங்கினர்.
வரிசையில் காத்திருப்பு
சுமார் 9.45 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும் கலைஞர் அரங்கிற்கு வருகை தந்த உதயநிதி வரிசையில் நின்றே வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது அவர் வரிசையில் நிற்பதை பார்த்த திருவாரூர் நகரச் செயலாளர் சங்கர் உள்ளிட்டோர், தம்பி நீங்க முன்னாடி போங்க எனக் கூறினார். இருக்கட்டும் பரவாயில்லை, வரிசையிலேயே நின்று கொள்கிறேன் எனக் கூறி உதயநிதி வரிசையில் நின்றே அரங்கிற்குள் சென்றார்.
எளிமை
உதயநிதி ஸ்டாலின் உள்ளே சென்ற போது கூட்டம் நடைபெற்ற அரங்கம் நிரம்பியிருந்ததால், நேராக பின்வரிசையில் சென்று அமர்ந்தார். அப்போது அவருக்கு இருக்கை தர பலர் எழுந்தும், வேண்டாம் எனக் கூறிவிட்டு எளிமையாக தனது இளைஞரணி சகாக்களோடு பின்னால் சென்று அமர்ந்துகொண்டார்.
சீனியர் நிர்வாகிகள்
உதயநிதி ஸ்டாலினின் அணுகுமுறையையும், எளிமையையும் கண்ட திமுக சீனியர்கள் சிலர் தங்களுக்குள் அவரை வியந்து பேசிக்கொண்டனர். இதனிடையே எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன் ஆகியோர் மட்டும் மேடைக்கு பக்கவாட்டில் இருக்கை போட்டு அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.