ஆண்டிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின்.. கிராம சபை கூட்டத்தில் சுறுசுறு.. மக்கள் வரவேற்பு!
ஆண்டிப்பட்டி கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை: ஆண்டிப்பட்டி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மாஸ் காட்டிய உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சில காலமாகவே தனது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் முயற்சியில் உதயநிதி இறங்கி வருகிறார். இது ஏதோ சினிமா சம்பந்தப்பட்ட ஒன்றாக பார்க்கப்பட்டாலும், திடீரென திமுக கட்சி கூட்டங்களிலும் தென்பட ஆரம்பித்தார்.
அதனால் இளைஞர் அணி தலைவர் பதவி இவருக்கு எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒரு பக்கம் கனிமொழியும், கிராம சபை கூட்டத்தை தூக்குக்குடி மாவட்டத்தை மையப்படுத்தி நடத்தி வருகிறார்.
கிண்டல் செய்தனர்
இதில் இதுவரை கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்ட கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார் என்ற அறிவிப்பு நேற்று கட்சி சார்பாக அறிவித்திருந்தது. இதை வைத்து பலர் கிண்டலடித்து வந்தனர்.
உற்சாக வரவேற்பு
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், பிச்சம்பட்டி ஊராட்சியில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதல்முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.
கட்சி கொடி
பிச்சம்பட்டி ஊராட்சி எல்லையான ஆண்டிப்பட்டி முருகன் தியேட்டர் அருகில் கட்சி கொடியையும் உதயநிதி ஏற்றி வைத்தார். பிறகு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கூறிய பிரச்சனைகளை பொறுமையாக உட்கார்ந்து கேட்டார் உதயநிதி.
கோரிக்கைகள்
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டாலும், ஏராளமானோர் உதயநிதியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொண்டு வந்து தந்தார்கள். அவற்றை பெற்றுக் கொண்ட உதயநிதி, நிச்சயம் பரிசீலிப்பதாக உறுதி தந்தார்.
இவ்வளவு கூட்டமா?
ஆனால், இன்று ஆண்டிப்பட்டியில் உதயநிதிக்காக இவ்வளவு கூட்டம் கூடியதற்கு காரணம், ஸ்டாலினின் மகன் என்பதாலா அல்லது நடிகன் என்ற முறையிலா என தெரியவில்லை!.