நடுரோட்டில்.. மாலையும் கழுத்துமாய் வந்த ஜோடி.. பதறி போன உதயநிதி.. கடைசியில் பார்த்தால்.. செம்ம..!
உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் அனைவரையும் கவர்ந்து வருகிறது
சென்னை: நடுரோட்டில் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற மணமக்களை, பார்த்ததும் உதயநிதி ஒரு செகண்ட் பதறிபோய்விட்டார்.. அதன்பிறகுதான் அந்த கூல் சம்பவத்தை செய்து அனைவரையும் குஷிப்படுத்தினார்.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கின்றன.. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம், கட்டாயத்தில் உள்ளது.
அதனால், திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு பக்கமும், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்னொரு பக்கமும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பிரச்சாரம்
அதிமுக, திமுக போன்ற கட்சிகள் வழக்கம்போல போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தாலும், இதில் புது என்ட்ரியாக நுழைந்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.. கடந்த முறை எம்பி தேர்தல் பிரச்சாரத்தைவிட இந்த முறை இவரது பிரச்சாரத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.. செல்லும் இடமெல்லாம் மகத்தான கூட்டம் சேர்கிறது. அதேபோல, உதயநிதியும் மேடைப்பேச்சு, அடுக்கு மொழி பேச்சு என்ற ஃபார்மாலிட்டி இல்லாமல் எளிதாகவும், இயல்பாகவும், கேஷூவலாகவும் பேசி வருகிறார்..
ஈர்ப்பு
இது மக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.. அதேபோல, திடீர் திடீரென ஏதாவது சர்ப்ரைஸை போகிற இடங்களில் எல்லாம் தந்து கொண்டிருக்கிறார். 2 நாளைக்கு முன்புகூட காஞ்சிபுரம் பிரச்சாரத்துக்கு சென்றவர், அந்த தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ மறைந்த திமுக நிர்வாகியின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.. நேற்றுகூட தேனிக்கு உதயநிதி சென்றிருந்தார்.. அப்போது, ஆண்டிபட்டி வந்திருந்த உதயநிதியின் வண்டியை திடீரென சிறுவர்கள் வழிமறித்தனர்..
சிறுவர்கள்
உதயநிதியை சூழ்ந்து கொண்டு ஒரு கோரிக்கை மனுவையும் தந்தனர்.. அதில், தங்களுக்கு கிரிக்கெட் பேட் வேண்டும் என்று அந்த மனுவில் சிறுவர்கள் கேட்டிருந்தனர்.. உடனே காரில் இருந்த இறங்கிய உதயநிதி, கண்டிப்பாக வாங்கி தருகிறேன் என்று வாக்குறுதி தந்து, அந்த சிறுவர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டார். அதுமட்டுமல்ல, அவர்கள் கேட்ட பேட், பந்து வாங்கி தந்துவிட்டேன் என்று, அடுத்த கொஞ்ச நேரத்தில் ட்விட்டரில் பதிவு ஒன்றையும் போட்டிருந்தார்.
சர்ப்ரைஸ்
அதுபோலவே, இன்னைக்கும் ஒரு சர்ப்ரைஸ் நடந்துள்ளது.. இரண்டு நாள் கரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.. இதில், தரகம்பட்டியில் பிரச்சாரம் செய்துவிட்டு, வெள்ளியணை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார் உதயநிதி.. அப்போது அந்த பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில், அன்பழகன் - துர்காதேவி ஆகியோருக்கு இன்று கல்யாணம் நடந்துள்ளது.. அந்த வழியாக உதயநிதி ஸ்டாலின் வரப்போவதாக மண்டபத்தில் அனைவருக்கும் தகவல் தெரிந்தது..
வாழ்த்து
இதையறிந்த மணமக்கள், அப்படியே கல்யாண கோலத்தில் ரோட்டுக்கு வந்து நின்றுவிட்டனர்.. சாலையோரம் மணக்கோலத்தில், மண்டபத்தை விட்டு வெளியே வந்து நடுரோட்டில் காத்திருந்தனர். அப்போதுதான் உதயநிதியின் காரும் அங்கே வந்தது.. அவர்களை பார்த்ததுமே உதயநிதி தன்னுடைய காரை நிறுத்த சொல்லிவிட்டார்.. வண்டியில் இருந்து கீழே இறங்கி வந்து, மணமக்களுக்கு வாழ்த்து சொன்னார்.. அவர்களுடன் சேர்ந்து போட்டாவும் எடுத்து கொண்டார்..
மகிழ்ச்சி
இதை மணமக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.. உதயநிதியை பார்க்கலாம் என்றுதான் மண்டபத்துக்கு வெளியே வந்து நின்றனர்.. ஆனால், வண்டியை விட்டு இறங்கி வந்து பேசுவார், செல்பி எடுப்பார் என்று தெரியாமல் திக்குமுக்காடி போய்விட்டனர். பின்னர், காரில் ஏறி அடுத்த பிரச்சாரத்துக்கு கிளம்பி சென்றார் உதயநிதி!