நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்... வீடு தேடிச்சென்றதால் நெகிழ்ந்த தோழர்கள்..!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள நல்லகண்ணுவின் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், கொரோனா பரவல் காரணமாக கட்சியினரை தவிர்த்து தாம் மட்டும் சென்று நல்லகண்ணுவிடம் உரையாடினார். 10 நிமிடங்களுக்கும் குறைவான சந்திப்பு என்றால் கூட இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் உடல்நலம் பற்றி உதயநிதியிடம் கேட்டறிந்த நல்லகண்ணு, கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்ப வசதி உதவியுடன் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் கட்சிப்பணிகளை பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். பதிலுக்கு உதயநிதியும் நல்லக்கண்ணுவின் உடல்நலம் பற்றி கேட்டறிந்ததோடு வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.
தமிழக அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டிய நிர்பந்தம் பிரதமருக்கு ஏன்? -மு.க.ஸ்டாலின் கேள்வி
வழக்கமாக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் யாரேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களை வீடு தேடிச்சென்று நலம் விசாரிப்பது மு.க.ஸ்டாலின் வழக்கம். இப்போது அதேபோல் அந்த வழக்கத்தை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அரசியலில் அவர் முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக கூறுகின்றனர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் வட்டாரத்தினர்.