டி.ஆர்.பாலுவை மாமா என்று தான் சொல்லுவேன்.. உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
போரூர் கூட்டத்தில் டிஆர் பாலுவை உதயநிதி ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்
சென்னை: "சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று திமுக தலைவர் கூறி உள்ளார். ஆனால் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவார் என நினைக்கிறேன்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் போரூரில் நடைபெற்றது.
இதில் முரசொலி மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: "டி.ஆர்.பாலுவை மாமா என்று தான் கூறுவேன். நான் வராம நீ கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று கூறியதால் தான் இந்த தேதி மாற்றப்பட்டது.
வெற்றிடம் என்று சில நடிகர்கள் வந்தார்கள். தேர்தல் முடிவை பார்த்து விட்டு எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை, திமுக இருக்கும் இடம் வெற்றியின் இடம், இங்கு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.
28 நாள் 38 தொகுதி பிரச்சாரம் செய்தேன். கைராசியில் நம்பிக்கை இல்லை, இந்த வெற்றிக்கு
தமிழக வாக்காளர்கள் கைராசி என்று சொல்லலாம். நான் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன். மக்கள் குறைகுறித்து தமிழக எம்.பிக்கள் மனு கொடுக்கின்றனர்.
ஆனால் திட்டங்கள் வேறு இடங்களுக்கு போகிறது. ஓட்டு போடவில்லை என்றால் தண்டிப்போம் என நேரடியாக சொல்கிறார்கள். திமுக எம்எல்ஏக்கள் சொந்த செலவில் 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று திமுக தலைவர் கூறி உள்ளார். ஆனால் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவார் என நினைக்கிறேன்" என்றார்.