ஆஹா உதயநிதி என்னாமா பேசுகிறார்.. நானே வியந்துட்டேன்.. சிலிர்த்து சிலாகித்த துரைமுருகன்!
சென்னை: இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது, அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகியதை தொடர்ந்து, திமுக சட்டவிதி 18, 19 பிரிவுகளின் படி இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்; ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் உதயநிதியுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
37 ஆண்டு காலமாக திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு வருவதை வரவேற்கிறேன்; உதயநிதி வருகையால் திமுக இளைஞரணி பிரகாசமாகும். இளைஞர் சமுதாயத்தின் விடிவெள்ளி உதயநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.
திமுகவுக்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு இது. உதயநிதியின் தேர்தல் பிரச்சாரங்களை பார்த்து நான் வியந்து போனேன். சொல்ல வேண்டிய கருத்தை கேட்பவர்கள் இதயத்தில் பதியும் படி பேசுவார் உதயநிதி என்றும் கூறினார். தந்தையை போலவே இளைய தலைமுறையினரை ஈர்ப்பார் உதயநிதி என்றும், ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி ஆற்றல் மிக்கவர் உதயநிதி என்றும் பேசினார்.
உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது, அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும். உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல கட்சியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றும் தெரிவித்தார்.