77ல் பிறந்தார் உதயநிதி ஸ்டாலின்.. பிறந்தது முதலே களப்பணி.. திமுகவினர் விண்ணப்பத்தால் கலகலப்பு!
உதயநிதி ஸ்டாலினின் விருப்ப மனு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: பிறந்த உடனேயே ஒரு குழந்தை கட்சியில் சேர்ந்துவிடுமா? வைரமுத்து பாஷையில் சொல்வதானால் "பூமி படாத பிள்ளையின் பாதம்" கட்சியில் உறுப்பினராகி விடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருவாரூர் தேர்தலில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன்தான் போட்டியிடுவார் என்று தகவல்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் யாராவது போட்டியிடவும் வாய்ப்பு என்று கூறப்பட்டது. அதற்காக ஸ்டாலின், செல்வி, உதயநிதி என்று பல பெயர்கள் அடிபட்டன.
நாளைதான் திமுக வேட்பாளர் இறுதி அறிவிப்பு வரும் என்றாலும், இன்றைக்கு திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் விருப்பமனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான செய்திகளும், அந்த விண்ணப்ப படிவமும் இணையத்தில் ரவுண்டு அடித்து கொண்டிருக்கிறது.
விண்ணப்ப படிவம்
அதற்கு காரணம், உதயநிதி வேட்பாளராக போட்டியிட போகிறார் என்பதைவிட அந்த மனுவில் உள்ள ஸ்பெஷாலிட்டிதான் வைரலாகிறது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த வருடம் 1977 என்று அந்த படிவத்தில் உள்ளது. அவர் திமுகவில் உறுப்பினரான வருடமும் 1977 என்றே உள்ளது.
நெட்டிசன்கள்
அதாவது உதயநிதி பிறந்தவுடனேயே திமுக உறுப்பினராக மாறிவிட்டதாக இந்த மனு நமக்கு சொல்ல வருகிறது. கண் கூட முழுசா திறக்க முடியாத பிறந்த பச்சிளம் குழந்தை எப்படி உறுப்பினராக முடியும் என்றுதான் கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள்.
களப்பணியா?
திமுக குடும்பம் என்பதால், பிறந்த அன்றே உறுப்பினர் உறுப்பினர் என்பதை கூட ஒரு பக்கம் எடுத்து கொள்ளலாம். ஆனால் 1977-ம் வருஷம் களப்பணி செய்தார் என்றே சொல்லப்பட்டுள்ளதுதான் நமக்கு தலையை சுற்றி கொண்டு வருகிறது.
ஆர்வ கோளாறா?
பிறந்த குழந்தை எப்படி களப்பணி செய்யுமா? அல்லது உதயநிதி ரசிகர்கள் அளவுக்கு அதிகமான ஆர்வக் கோளாறினால் இப்படி மனுவை பூர்த்தி செய்து விட்டார்களா என்பதை யாராவது தெளிவுபடுத்துவார்களா?