திமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: திமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவே இ-பாஸ் நடைமுறையை முதலமைச்சர் நீட்டித்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே இ-பாஸ் முறைக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், மற்ற நாட்களில் எல்லாம் பரவாமல் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் கொரோனா பரவுமோ என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
மூணாறு தொழிலாளர்களின் மரண செய்தி மன வேதனை தருகிறது - ஓபிஎஸ், ஸ்டாலின்,சீமான் இரங்கல்
திமுகவை முடக்க
திமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ் முறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீட்டித்து வருவதாகவும், முதலில் இந்த இ-பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இ-பாஸ் முறை தேவையில்லை என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட காரணத்தினால், இ-பாஸ் தொடரும் என முதல்வர் பிடிவாதம் பிடிப்பதாக கூறியுள்ளார்.
அரசுக்கு சவால்
இ-பாஸ் முறை என்பது ஊழலுக்கு வழிவகுத்துக் கொடுப்பதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் கூறினார். மேலும், இ-பாஸ் பெறாமல் தாம் சாத்தான்குளம் சென்றதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் கூட அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்றும் ஏன் சட்டப்படி தம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வினவினார். மேலும், தன்னை 'சாக்லெட் பாய்' என்று விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமாரை 'பிளே பாய்' என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
ஐ.எம்.ஏ. தகவல்
மேலும், கொரோனாவால் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தாம் கூறிய போது அதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்ததாகவும், ஆனால் ஐ.எம்.ஏ.(இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்) அமைப்பு வெளியிட்ட பட்டியலிலேயே 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் என்ன பதில் சொல்லப் போகிறார் என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் முடிந்தால் தம் மீது அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.
உதயநிதி கேள்வி
திமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாகவும், காணொலி மூலம் சந்திப்புகள், ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற நாட்களில் எல்லாம் பரவாமல் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் கொரோனா பரவுமோ என்றும் ஒரு நாள் ஊரடங்கை பற்றி தனக்கு புரியவில்லை எனவும் கூறினார்.