அதிகாரப் போட்டி... கமிஷன் போட்டி... கொரோனா தடுப்பு பணிகளில் வெறும் மீடியா பேட்டி -உதயநிதி விமர்சனம்
சென்னை: அதிகாரப் போட்டியும், கமிஷன் போட்டியும் உள்ளதால் கொரோனா தடுப்பு விவகாரத்தில் வெறும் மீடியா பேட்டி மட்டுமே முதலமைச்சர் கொடுத்து வருவதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அரசு இன்னும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கொடிய கொரோனாவில் இருந்து சென்னை மக்களை பாதுகாக்க அரசு ஒருங்கிணைப்பு பணிகளை முறையாக செய்ய வேண்டும் என ஸ்டாலின் இன்று காலை அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அவரைத் தொடர்ந்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டரில், கொரோனா காலத்திலாவது தமிழக அரசு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கட்சியில் அதிகாரப் போட்டி, ஆட்சியில் கமிஷன் போட்டி உள்ளதால் கொரோனா தடுப்பு பணிகளில் வெறும் மீடியா பேட்டி மட்டும் உள்ளதாக விமர்சித்துள்ளார் உதயநிதி.
மேலும், கொரோனா இறப்பு விவரங்களை அரசு மறைக்கக்கூடாது என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் அறிக்கைகள் மூலமே நடப்பதாகவும், செயலில் இல்லை எனவும் விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பு விவகாரத்தில் அரசுக்கு எதிராக தொடர்ந்து தனது அதிருப்தி குரலை வெளிப்படுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஊரடங்கில் ஓட்டை உடைசல்... உலகிலேயே இப்படி அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம் தான் -மு.க.ஸ்டாலின்
இதனிடையே இன்று காலை வெளியிட்ட மற்றொரு ட்வீட்டர் பதிவில், பேரறிவாளன் வாக்குமூலத்தை தவறுதலாக எழுதிவிட்டதாக விசாரணை அதிகாரியே ஒப்புக்கொண்டும், 30 ஆண்டுகள் சிறை என்பது மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளார். ஒரு தாயின் பாசப்போராட்டத்தை அரசியல் ஆக்காமல் அற்புதம்மாள் போராட்டத்துக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.