பேனர் கலாச்சாரம்.. சுபஸ்ரீயின் மறைவோடு முடியட்டும்.. உதயநிதி ஸ்டாலின்
Recommended Video
சென்னை: பேனர் கலாச்சாரம் சுபஸ்ரீயின் மறைவோடு முடியட்டும் என திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் சாலையோரம் இருந்த பேனர் விழுந்து கடந்த வாரம் 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இவரது குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன், உதயநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நல்லுள்ளங்கள்
அதில் அவர் கூறுகையில் சாலை தடுப்பில் வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த சகோதரி சுபஸ்ரீயின் இல்லத்துக்கு நேற்று சென்றேன். ஆறுதல் சொல்லித் தேற்றமுடியா இழப்பு. தங்கள் மகளின் இறுதி நிமிடத்தை, ஆட்சியாளர்களின் அகங்காரத்தை, தங்களுக்குக் கைகொடுத்த நல்லுள்ளங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டனர் அவரின் பெற்றோர்.
டிராஃபிக் விதிகள்
"சுபஸ்ரீ இல்லைங்கிறதையே எங்களால இன்னும் நம்ப முடியலை சார். டிராஃபிக் ரூல்ஸை முறையா ஃபாலோ பண்ணுவா. அந்த பேனர் மேல சாயவும், அவளால ஸ்டெடி பண்ணமுடியாம கீழ விழுந்திருக்கா. இது விபத்தே கிடையாது. எல்லாத்துக்கும் அந்த பேனர்தான் சார் காரணம்" என்று கண்கலங்கியபடி அந்தநாளை விவரிக்கிறார் சுபஸ்ரீயின் தந்தை ரவி.
ஆம்புலன்ஸ்
"குழந்தை அடிபட்டு அரைமணிநேரமா கீழ கிடந்திருக்கா சார். ‘இந்த இடம் எந்த ஏரியா லிமிட்ல வருது'னு சர்ச்சை பண்ணிட்டு இருந்திருக்காங்க. அதுவரை ஒரு ஆம்புலன்ஸ்கூட வரலையாம். நல்லவங்க நாலு பேர் ஒரு லோடு ஆட்டோவுல தூக்கிட்டுப்போயிருக்காங்க. இந்த இழப்புக்கு நாங்க யாரையும் குற்றம் சொல்லலை. இருந்தாலும், ‘ஆயிரம் பேனர்கள் வைக்கும்போது ஒரு பேனர் விழத்தான் செய்யும். வாகனம் ஓட்டிகள்தான் கவனமாகச் செல்லவேண்டும்'னு சிலர் பேட்டி கொடுக்கிறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு." & சுபஸ்ரீயின் அம்மா பேச்சிலிருந்து தாயின் தவிப்பை புரிந்துகொள்ளமுடிந்தது.
உதவியவர்களுக்கு நன்றி
"என் மகள் இறந்த செய்தி கேள்விப்பட்டு வந்த பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ., கடைசிவரைகூட இருந்து, எஃப்.ஐ.ஆர், இறப்புச் சான்றிதழ் வாங்குறது வரை அவ்வளவு வேலைகள் செஞ்சிக்கொடுத்திருக்கார். இப்ப திமுக சார்பில் நீதிமன்றத்துல பிரமாணப்பத்திரம் தாக்கல் பண்ணினது வரை இந்த விஷயத்தில் உங்க தலைவர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எல்லாருக்கும் நன்றி சொல்லணும்" என்று அந்தச் சூழலிலும் உதவியவர்களை பாராட்டி கைகூப்பி நன்றி சொல்கிறார் ரவி.
பேனரால யாரும் இறந்தாங்க
சுபஸ்ரீயின் வீட்டிலிருந்து கிளம்பும்போது அவரின் அம்மா கண்ணீர் மல்க ஒரு வேண்டுகோள் வைக்கிறார். "இன்னைக்கு என் பொண்ணு போயிட்டா, நாளைக்கு இன்னொருத்தருக்கும் அப்படித்தானே நடக்கும். சுபஸ்ரீக்கு நடந்ததுதான் எல்லாருக்கும். இந்த பேனர் கதையை சுபஸ்ரீயோட சுபமா முடிச்சிரணும் சார். இனிமே யாரும் பேனரால இறந்தாங்கனு வரவேக்கூடாது." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.