காக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு இளைஞர் அணியினருக்கு வழிகாட்ட வேண்டும் என்று சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பட்டை டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வளாகத்தில் நேற்று திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்லூரி பருவத்தில் இருந்தே திமுக தலைவருடன் இணைந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரித்துள்ளேன். எனவே ஆயிரம் விளக்கு தொகுதிக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த முகாமை ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடங்கி வைத்திருக்கிறேன். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும். அதற்கு முழு காரணமாக இந்த ஆயிரம் விளக்கு தொகுதி இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெ.அன்பழகன் பேசுகையில், "யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு இளைஞர் அணியினருக்கு வழிகாட்ட வேண்டும்.
5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- ஸ்டாலின் கண்டனம்
இதை சொல்வதால் காக்கா பிடிப்பதாக யாரும் நினைத்து கொள்ள வேண்டாம். காக்கா பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்றார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். அதேபோல் உதய நிதியும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஜெ அன்பழகன் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.