ஸ்டாலினின் தொடர் முயற்சியில் 'இணைந்துகொண்ட' ரஜினிகாந்த்..நன்றி சொல்லி பஞ்ச் அடித்த உதயநிதி
சென்னை: சாத்தான்குளம், தந்தை, மகன் வழக்கில் நீதி கிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் திமுக தலைவர் ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்து கொண்டதற்காக ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடையை குறிப்பிட்ட நேரத்துக்குள் மூடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டின் பேரில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் வைத்து கடுமையான சித்திரவதைகளுக்கு பிறகு கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அங்கு உடல்நலக்குறைவால் அடுத்தடுத்து அவர்கள் மரணம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, சமூகநல ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆயுதம் தேவையில்லை.. நிராயுதபாணியாவே வெளுப்பார்கள்.. சீன எல்லையில் இந்தியாவின் கட்டக் பிரிவு வீரர்கள்
அமெரிக்க கருப்பின வாலிபர்
அது மட்டும் கிடையாது. அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீசாரால் கழுத்தில் மிதித்து துடிக்கத் துடிக்க கொன்ற சம்பவத்துக்கு எதிராக எப்படி அந்த நாடு முழுக்க ஒன்றிணைந்ததோ அதுபோல, சாத்தான்குளத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக, கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். குற்றவாளிகளுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பும் வற்புறுத்தி வருகிறது.
திமுக உதவிகள்
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து வாகனம் மூலமாக சாத்தான்குளம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். திமுக தூத்துக்குடி எம்பி கனிமொழி பல நாட்களாக சாத்தான்குளத்தில் முகாமிட்டு, ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், இந்த விஷயத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து அடிக்கடி அதை சுட்டிக்காட்டி வருகிறார்.
தாமத கண்டனம்
இந்த நிலையில், வெகு நாட்கள் கழித்து, அழுத்தங்கள் அதிகரித்த பிறகு, இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்த், "சத்தியமா விடவே கூடாது" என்ற ஹேஸ்டேக் தலைப்போடு ஒரு டுவிட் வெளியிட்டார். அதில், தந்தையையும், மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை, மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பஞ்ச் அடித்த உதயநிதி
ரஜினிகாந்த் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அத்தோடு, நைஸாக ஒரு பஞ்ச் அடித்துள்ளார். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் 'பல' நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. இதை சின்ன இஷ்யூவாக நினைக்கும் மனநிலையை மாற்றிக் கொண்டு, ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் சட்ட பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசை கேட்டுக் கொள்கிறோம், என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் பல நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது என்று குறிப்பிட்டு, அவர் ரஜினிகாந்த் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் என்பதை வைத்து பார்க்கும்போது, தாமதமாக ரஜினிகாந்த் இப்படி ஒரு கண்டனத்தை பதிவு செய்துள்ளதை கிண்டல் செய்துள்ளதாகவே நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.