"அப்ப அடுத்த முதல்வர் சூரப்பா தான் போல.. இது காவி கும்பல் முயற்சி".. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
சென்னையில் உதயநிதி ஸ்டாலின் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டார்
சென்னை: "நம்ம வீட்டு பிள்ளைகள் அண்ணா பல்கலையில் படிக்க கூடாது என்று காவி கும்பல் முயற்சி செய்து கொண்டு இருக்கிறது.. அடுத்த முதல் வேட்பாளர் யார் என்ற போட்டியில் சூரப்பாவும் இருப்பார் போல இருக்கு.. அவர் நிழல் முதல்வர் போன்று செயல்படுகிறார்" என்று உதயநிதி ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் வெடித்ததில் இருந்தே திமுக படுதீவிரமாக இந்த விவகாரத்தில் இறங்கி உள்ளது.. ஒவ்வொருமுறையும் திமுகவின் செயல்பாடு இது என்றாலும், இந்த முறை கொஞ்சம் சீறி பாய்ந்து வருகிறது.. குறிப்பாக, இளைஞர் அணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்து இன்று நடத்தி காட்டி உள்ளது.
சென்னையில் கிண்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.. இந்த ஆர்ப்பாட்டமே அமர்க்களப்பட்டது.. "கல்வி எங்கள் ஆயுதம் கழகம் எங்கள் கேடயம், துணைவேந்தரா? துரோகி வேந்தரா? சூரப்பன்னா எட்டப்பனா ? இது கல்விப்பூஞ்சோலை இங்கு காவிக்கென்ன வேலை? அண்ணா பல்கலைக்கழகம் அந்நியர்களுக்கா?" என்ற வாசகர்கள் மிரள வைத்தன. இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக நிற்கிற சூரப்பாவை கண்டிக்கிறோம் என்றும், எங்கள் நாடு தமிழ்நாடு சூரப்பாவே வெளியேறு என்றும் கண்டன கோஷங்களை திமுகவினர் விண்ணைமுட்டும் அளவுக்கு எழுப்பினர்.
இதையடுத்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "நம்ம வீட்டு பிள்ளைகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க கூடாது என்று காவி கும்பல் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.. இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினால் போலீசார் கைது செய்வார்கள் என்று சொன்னார்கள்.. கைதுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் கிடையாது.. இஸ்ரோவில் வேலை செய்பவர்களை அனுப்ப கூடிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுகிறது.
அப்படி இருக்கும்போதுபோது எதுக்காக, சிறப்பு அந்தஸ்து? மத்திய அரசு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கினால் பொறியியல் படிப்பதற்கு மாணவர்கள் வருடத்துக்கு எப்படியும் 2 லட்சம் தேவைப்படும்... இந்த திட்டத்தை கைவிடா விட்டால் போராட்டம் மறுபடியும் தொடரும்... இது முதல் போராட்டம் தான். இன்னும் வரப்போகின்ற காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு
இந்த ஆட்சியின் அவலம் இது.. அடுத்த முதல் வேட்பாளர் யார் என்ற போட்டியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும் இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் நிழல் முதல்வர் போல செயல்படுகிறார்.. தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறார்.. இதுகுறித்து அமைச்சர் தெரியாது என்கிறார்.. இது அதிமுக ஆட்சி போடும் இரட்டை வேடம்" என்றார்.
ஒரே நாளில் திமுகவின் இளைஞரணியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகியும் வருகின்றனர்.. அதேசமயம், உதயநிதியின் செயல்பாடுகளும் இந்த நேரத்தில் வேகம் எடுத்துள்ளது திமுக இளைஞர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.