எனக்கு, என் மனைவிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை- ட்விட்டரில் விநாயகர் சிலை படம் மகளுக்காக... உதயநிதி
சென்னை: எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை இல்லை; நான் ட்விட்டரில் பகிர்ந்தது அம்மா வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலையைத்தான் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாலை தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறுமி விநாயகர் சிலையை கையில் பிடித்தபடி இருக்கும் படத்தை பதிவிட்டிருந்தார். அதில் வேறு எந்த வாசகமும் இடம்பெறவில்லை.
உதயநிதியின் இந்த ட்விட்டர் பதிவை முன்வைத்து ஒரே அதகளமாகிவிட்டது சமூக வலைதளங்கள். உதயநிதி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்; இதெல்லாம் தேவையா? அமைதியாகவே இருந்திருக்கலாம் என அத்தனை விமர்சனங்களும் ஒரே நாளில் கொட்டி குவிந்துவிட்டன.
"அது என்னோட பிள்ளையார் இல்லைங்க.. என்னோட அம்மாவோட சிலை".. பற்றிய தீயை அணைத்த உதயநிதி!
உதயநிதி அறிக்கை
இந்நிலையில் சர்ச்சை குறித்து உதயநிதி 2 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை: மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசு பொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்ததைப் பரபரப்பாக விவாதிக்கிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப் பிடித்துக் கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில் இங்கு எது நடந்தாலும் அது கழகத்துக்கு எதிரானதாக திசைதிருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதிவேலைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை
ஒருவிஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவர். எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. அதில் எங்கள் மூதாதையர்களின் உருவப் படங்கள் உள்ளன. மேலும் என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு. முக்கியமான முடிவெடுக்கும் போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டுச் செய்வது எங்கள் வழக்கம்.
அம்மா வாங்கி வைத்த சிலை
இந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என் மகள், இந்த சிலையை எப்படி செய்வார்கள்' என்று கேட்டார். இந்த சிலை களிமண்ணில் செய்தது; தண்ணீரில் கரைக்க எடுத்து சென்றுவிடுவார்கள் என்றேன். இந்த சிலையை எதற்கு தண்ணீரில் போடனும் என்று கேட்டார். அதுதான் முறை என்கிறார்கள். அடுத்த வருஷத்துக்குப் புதிதாக வேறொன்று வாங்குவார்கள் என்றேன்.
மகளுக்காக படம்
கரைப்பதற்கு முன் இந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டார். அவரின் விருப்பத்தின் பேரில்நான் தான் அந்தப் படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவரின் விருப்பத்துக்காக என் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன் அவ்வளவே. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார். "இந்த அறிக்கையை சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே.என்ற தலைப்பில் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் உதயநிதி.