ஹைகோர்ட் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது - தண்டனை பெற்றுத்தரும் வரை போராடுவேன் - கவுசல்யா
நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை என்று உடுமலை பேட்டை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பாக அவரது மனைவி கவுசல்யா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: எனது சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளிக்கிறது என்று உடுமலை பேட்டை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பாக அவரது மனைவி கவுசல்யா கருத்து தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் நடந்த ஆணவக்கொலை வழக்கில் ஹைகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர், பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை காதலித்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே மனைவி கவுசல்யாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக இருவரையும் வெட்டி சாய்த்து தப்பித்து சென்றது. இந்த காட்சி அருகில் இருந்து சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
உடுமலை ஆணவக்கொலை அப்பீல் வழக்கு தீர்ப்பு டைம் லைன்: 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
சங்கர் படுகொலை சிசிடிவி காட்சி
சங்கர் வெட்டப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் சங்கர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே மரணமடைந்தார். படுக்காயங்களோடு கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கவுசல்யா போராட்டம்
கணவரை கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்று கவுசல்யா போராடினார். இந்த வழக்கு தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரைக் போலீசார் கைது செய்தனர்.
ஆணவக்கொலை வழக்கு தீர்ப்பு
சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது. ஆணவக்கொலையில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளில் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு 2017 டிசம்பர் 13 இல் தீர்ப்பு வெளியானது.
6 பேருக்கு தூக்கு தண்டனை
கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 11-வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணவரை கொன்றவர்கள் பெற்றோர்கள், உறவினர்கள் என்று தெரிந்தும் கடைசி வரை போராடி வெற்றி பெற்றார் கவுசல்யா.
அப்பீல் வழக்கு
மரண தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், மூவரின் விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
ஹைகோர்ட் தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். அதேபோல், 9-வது குற்றவாளியான தன்ராஜ் மற்றும் 11வது குற்றவாளியான மணிகண்டன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கு தள்ளுபடி
தூக்கு தண்டனை பெற்ற மற்ற 5 பேருக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை விடுவித்து காவல்துறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
கவுசல்யா அதிர்ச்சி
பட்டப்பகலில் நடந்த ஆணவக்கொலை வழக்கில் ஹைகோர்ட் அளித்த தீர்ப்பு சங்கரின் மனைவி கவுசல்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள கவுசல்யா, எனது சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று கூறினார்.
அவசரம் ஏன்?
முதலில் அன்னலட்சுமி விடுதலை செய்யப்பட்டார். இப்போது சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கிறது. அன்னலட்சுமி உள்ளிட்ட மூன்று பேரின் விடுதலைக்கு எதிரான மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் இவ்வளவு அவசரமாக தீர்ப்பை வழங்க வேண்டுமா என்றும் கேட்டார் கவுசல்யா.
போராட்டம் தொடரும்
சமூகம் பெரும்பாலும் முடங்கியுள்ள சூழலில் இந்த தீர்ப்பை வழங்கியிருப்பது எனக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. தமிழக அரசு இந்த வழக்கை இன்னும் அதிக முனைப்போடும் அக்கறையோடும் நடத்தியிருக்கலாம். திருப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்ததற்கும் சென்னை ஹைகோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்றதற்கும் அதிக வேறுபாட்டை உணர்கிறேன். இன்னமும் நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கை இழந்து விடவில்லை என்றும் கவுசல்யா கூறியுள்ளார்.