தமிழகத்தையே உலுக்கிய கொலை.. A1 குற்றவாளி மீது குற்றத்தை நிரூபிக்க முடியாதது யார் தவறு? கமல்ஹாசன்
சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில், முதல் குற்றவாளியான கவுசல்யா தந்தை சின்னசாமி, ஹைகோர்ட்டால், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஏராளமான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அரசுத்தரப்பு காட்டிய போதும், சின்னசாமி மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டது.
குற்றச்சாட்டை பொறுத்தவரை, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே நிரூபிக்க முடியும். ஆனால், அரசுத்தரப்பு இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை கோர்வையாக நிரூபிக்கத் தவறி விட்டது
உடுமலை சங்கர் கொலை வழக்கு- சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் சின்னசாமி விடுதலை- தீர்ப்பு முழு விவரம்
ஆதாரங்கள் இல்லை
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனையும், மதனையும் உடுமலைப்பேட்டையில் உள்ள லாட்ஜில் சின்னசாமி தங்க வைத்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. பழனி பூங்காவில் சின்னசாமியை மூன்று பேர் சந்தித்து பேசியதாக கூறும் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமானதாக உள்ளது. இதுசம்பந்தமாக சாட்சியளித்தவர்களுக்கு சின்னசாமியைத் தவிர வேறு எவரையும் தெரியாது.
இன்ஸ்பெக்டரை விசாரிக்கவில்லை
குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீசன் மற்றும் மணிகண்டனை கைது செய்த முக்கிய சாட்சியான உடுமலைப்பேட்டை காவல் ஆய்வாளர் வெங்கட்ராமனை விசாரிக்கவில்லை. காவல் ஆய்வாளரான அவர், சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் ட்வீட்
உடுமலை சங்கர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான சின்னசாமிக்கு எதிரான குற்றங்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசு தவறியதால் சின்னசாமி விடுதலை செய்ய தீர்ப்பளித்து உள்ளதாக நீதிபதிகள் அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்த தீர்ப்பு தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
யார் தவறு?
கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு? இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.