உளுந்தூர் பேட்டை பாதாள சாக்கடை திட்டம் என்ன ஆச்சு.. அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: உளுந்தூர் பேட்டை பாதாள சாக்கடை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
விழுப்புரம் மாவட்ட உளுந்தூர்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த அரசு உத்தரவிட்டது. இதற்கான பணிகள் நடைப்பெற்று வரும் சாலைகளில் வாகனங்களை, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன
மேலும் இரண்டு ஆண்டுகளாக நடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தால் அடிக்கடி சாலை விபத்துகள், உடல் நல குறைவும் ஏற்பட்டு வருகிறது. எனவே உளுந்தூர்ப்பேட்டையில் பாதாள சாக்கடைத்திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சமூக ஆர்வலர் வேலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், உளுந்தூர்பேட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டதாகவும், அதன் மீது சாலை அமைக்கும் பணியும் விரைவில் நிறைவு செய்யப்படும் என இத்திட்டத்திற்கான செயல் அதிகாரி நீதிமன்றத்தில் கடந்த 2018 ம் ஆண்டு அறிக்கை அளித்தார்.
ஆனால் நீதிமன்றத்தில் தெரிவித்தது போல் எந்த பணிகளும் நடைப்பெறவில்லை. நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வு, உளுந்தூர்பேட்டை பாதாளச்சாக்கடை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து நவம்பர் 11 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திட்டத்தின் செயல் அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.