எந்த பாலை போட்டாலும் திருப்பி அடிக்கும் எடப்பாடி.. நீட் தேர்வை கொண்டு வந்தது யார்?.. காரசார விவாதம்
சென்னை: சட்டசபையில் திமுக எந்த கேள்வி கேட்டாலும், அதை திமுக மீதே திருப்பி அடித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி படுகையில் மீதேன் தொடங்கி நீட் வரை பல விஷயங்களில் முதல்வர் கருத்து தெரிவித்து வருகிறார். இப்போது நீட் விவகாரத்தில் திமுகவை விமர்சித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டசபையில், நீட் தேர்வு யார் ஆட்சியில் எப்போது வந்தது ? யார் அறிமுகப்படுத்தினார்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
சட்டசபை இன்று கூடிய உடன், நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது, நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இடையே பேரவையில் காரசார விவாதம் நடந்தது.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் நீட் தேர்வை ரத்து செய்ய திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. பேரவையில் ஏக மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளோம்., ஆனால் மத்திய அரசு நம் மசோதாக்களை மதிக்க வில்லை என குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் - தலைமை உத்தரவை மீறிய ஓ.எஸ். மணியன்
திமுகு கூட்டணி காரணம்
இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம். ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக கூட்டணி தான் என்று கடுமையாக விமர்சித்தார்.
எப்படி என்பதை சொல்லுங்க
அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு விஷம் என்றால் அதனை விதைத்தது திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தான். ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் வழக்கு தொடர்ந்து நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார். நீட் தேர்வுக்கு விலக்கு வராது என்ற தீர்ப்புக்கு துணை நின்றவர் நளினி சிதம்பரம். மேலும், எட்டு மாதத்தில் நீட் தேர்வு இருக்காது என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அதை எப்படி என்பதை சொல்ல வேண்டும் என்றார்.
மத்திய அரசை வற்புறுத்துவோம்
இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு பிரச்னை வந்த போது டெல்லிக்கு சென்று வலியுறுத்தி சட்டமுன்வடிவை உருவாக்கி சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி நடவடிக்கை எடுத்தோம். அந்த வகையில் தான் நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசை வற்புறுத்தி தீர்வு பெறுவோம் என்றார்.
ஊசி அளவில் இடம்
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வை அனைத்து மாநிலமும் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கடைசி விளிம்பு வரை போராடும் மாநிலம் தமிழகம் மட்டும் தான். ஜல்லிக்கட்டு போல இதில் விலக்கு பெற வழி இல்லை. ஊசி அளவில் இடம் கிடைத்தாலும் அதில் நுழைந்து நீட்டுக்கு விலக்கு பெறுவோம் என்றார்.