2020ல் மறக்க முடியுமா: எல்லோரையும் கை கழுவ வைத்து மாஸ்க் போட வைத்த கொரோனா
2020ஆம் ஆண்டு கெரோனா பீதியிலேயே முடியப்போகிறது. சாப்பிடும் போது கூட கை கழுவ யோசித்த மக்களை அடிக்கடி கை கழுவ வைத்து மாஸ்க் உடன் சுற்ற வைத்து விட்டது.
சென்னை: 2020ஆம் ஆண்டு பல மறக்கமுடியாத சம்பவங்களை மனதில் தேக்கி வைத்து விட்டது. கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான மக்களை வீட்டிற்குள் முடக்கிப் போட்டதோடு எல்லோரையும் அடிக்கடி கை கழுவ வைத்ததோடு மாஸ்க் உடன் சுற்ற வைத்து விட்டது.
2020ஆம் ஆண்டு பிறந்த போது ஆரம்பம் எல்லாம் அமர்களமாகத்தான் இருந்தது. சீனாவில்தானே வைரஸ் வந்திருக்கிறது நமக்கென்ன என்று கெத்தாக திரிந்தவர்கள் எல்லாம் பிப்ரவரி மாதத்திலேயே பீதியடைய ஆரம்பித்து விட்டனர்.
மார்ச் மாதத்தில் இருந்தே மக்கள் அனைவருமே சமூக இடைவெளி என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். சானிடைசர், மாஸ்க் என்ற வார்த்தைகள் அதிகம் புழங்க ஆரம்பித்தன.
கொரோனாவால் கோடீஸ்வரர்களாக இருந்த பலர் தெருக்கோடிக்கு வந்தனர் அதே நேரத்தில் மாஸ்க் விற்றும், சானிடைசர் விற்றும் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் இருக்கின்றனர்.
பெண்களுக்கு சேலைக்கு மேட்ச் ஆக மாஸ்க் விற்பனை கொடி கட்டி பறந்தது. கோவிலுக்கு போனால் திருநீரும் துளசி தீர்த்ததும் கொடுத்தது போய் தெர்மல் ஸ்கேன் வைத்து நெற்றியில் பரிசோதனை செய்யும் காலம் வந்தது. சானிடைசர், ஹேண்ட் வாசர் ஜெல் கொடுத்துதான் கோவிலுக்குள்ளேயே விடும் நிலைமை வந்தது.
உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா எங்க பேஸ்ட்ல இருக்கு என்று சொல்லி விற்பனை செய்தவர் எல்லாம் கொடிய வைரஸ் கிருமியை கொல்லும் என்று சொல்லி விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
தங்கத்தில் மாஸ்க் செய்து போட்டு அதை செல்பி எடுத்து போட்டு கெத்து காட்டிய ரவுடிகளும், நல்ல வேலை யார் கண்லயும் படாமல் தப்பிச்சிரலாம் என்று பாதுகாப்புக்காக மாஸ்க் அணிந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நண்பர்களைப் பார்த்தலே ஹாய் சொல்லி கை குலுக்கி கட்டிப்பிடித்தவர்கள் எல்லாம் மரியாதையாக கை எடுத்து கும்பிட்டு வணக்கம் வைக்கும் காலத்திற்கு மாற்றியது கொரோனா.
சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வந்த உடனே குடிக்க தண்ணீர் கொடுத்து உபசரித்த காலம் போய் வீட்டிற்கு வருபவர்களை வாசலில் நிற்க வைத்து கை கழுவ சானிடைசர் கொடுத்து உபசரிக்கும் காலமாகி விட்டது.
மருத்துவமனைக்கு உடல் நலமில்லாமல் போனவர்கள் மட்டுமே மாஸ்க் அணிந்திருந்த காலம் போய் மாஸ்க் அணிந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு மட்டுமல்லாது வீட்டை விட்டு வெளியே வர முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தி விட்டது 2020ஆம் ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாதி மத பேதமின்றி பற்றி பரவிய கொரோனாவின் ஆட்டத்தினால் 2020ஆம் ஆண்டு எந்த காலத்திலும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது.