"என்ன பாய்.. சவுக்கியமா".. மறக்க முடியாத ரகுமான்கான்.. உலகை விட்டு பிரித்து சென்ற 2020!
திமுகவின் ரகுமான்கான் நினைவுகள் போற்றத்தக்கது
சென்னை: இந்த வருடம் மறக்க முடியாத தமிழக அரசியல் தலைவர்களின் வரிசையில் டாப் லிஸ்ட்டில் உள்ளவர் திமுகவின் ரகுமான்கான்!
மறைந்த தலைவர் கருணாநிதியின் செல்லப்பிள்ளை இவர்.. "என்ன பாய், சவுக்கியமா" என்று கலைஞர் கூப்பிட்டாலே அது ரகுமான்கானைதான் என்பது சுற்றி இருப்போருக்கு நன்றாக தெரியும். அந்த அளவுக்கு இவர்களின் நெருக்கம் அந்நியோனமானது.. அபரிமிதமானது!!
ரகுமான்கான் என்றதுமே நம் கண்முன் வந்து நிற்பது அவரது தோற்றம்தான்.. அதிலும், நெற்றியில் விழும் சுருள்முடியும், அரும்பு மீசையும்தான் இவரது டிரேட் மார்க்.. அவரது ஸ்பிரிங் முடிக்கே அன்று ஏராளமானோர் விழுந்து கிடந்தனராம்.. எப்பவுமே ஒரு மென்மையான சிரிப்பு சிரித்து கொண்டே இருப்பார்.
உயிர்நாடி
திமுக இவரது உயிர்நாடி.. 1977-ல் எம்ஜிஆர் முதல்வராக இருநத்போது, திமுகவின் எம்எல்ஏக்கள் 48 பேர்தான்.. அதில் 3 பேர் மிக முக்கியமானவர்கள்.. ஒருவர் க.சுப்பு, இரண்டாமவர் துரைமுருகன், மூன்றாவது நபர் ரகுமான்கான்.. இந்த 3 பேர்தான் எம்ஜிஆர் அரசை அன்று வெலவெலக்க வைத்தவர்கள். இவர்கள் சட்டசபையில் எழுந்து நின்றாலே, அன்று விவகாரம்தான்.. கேட்கும் கேள்விகளுக்கு உடனடி பதில் சொல்ல தெரியாமல் தடுமாறியது அன்றைய அதிமுக அரசு!
இடி, மின்னல், மழை
அதனால்தான் இவர்களை இடி, மின்னல், மழை என்று அடைமொழியுடன் அழைத்தனர்.. அதிலும் ரகுமான்கானை யாராலும் கன்ட்ரோல் செய்யவே முடியாதாம்.. கேள்வி கேட்க மட்டும் ரொம்பவும் மெனக்கெடுவார்.. எந்த கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாதோ, அந்த கேள்வியைதான் கேட்பார்.. இதற்காகவே சட்டமன்ற வளாகத்தில் உள்ள லைப்ரரியில் உள்ள புத்தகங்களை புரட்டிக் கொண்டு எந்நேரமும் இருப்பார்.. கொஞ்ச நேரத்தில் காரசார கேள்வியுடன் அவைக்குள் நுழைவார்!
கலைஞர்
இந்த மும்மூர்த்திகள் கேட்கிற கேள்விகளால், சபையில் சலசலப்புகள் எழுந்தபடியே இருந்திருக்கின்றன.. ஒருமுறை, சபாநாயகர் பொறுமை இழந்து, "ஆண்டவன்தான் உங்களை எல்லாம் காப்பாத்தணும்" என்றார்.. உடனே கலைஞர் எழுந்து, "கரெக்ட்.. நான்தான் ஆண்டவன்.. நான் அவங்களை பாத்துக்கறேன்" என்று சொல்லி பின்னால் திரும்பி இவர்களை அமைதிப்படுத்துவாராம்.
காமெடி
இவர்களை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் அனுப்பி பேச வைத்தார் கருணாநிதி.. ரகுமான்கான் பேச்சு என்றால் பொதுமக்கள் திரண்டு திரண்டு வருவார்கள்.. காரணம் வரிக்கு வரி காமெடி இருக்குமாம்.. எம்ஜிஆர் முதற்கொண்டு இவர் பேச்சை கேட்டு ரசிப்பார்கள்.. "பெரியவர் எம்ஜிஆர்" என்று வயதை குறிப்பிட்டு சொல்லும்போது அதிமுகவினர் ஆக்ரோஷமாகி விடுவார்களாம். இவரை சமாளிக்க முடியாமல்தான், இவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல்தான், ஜெயலலிதாவை முன்னிறுத்தியதாக ஒரு பேச்சு கூட உண்டு.
எழுத்து
ரகுமான்கான் எழுத்தும் அற்புதமாக இருக்கும்.. முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.. விடிகாலை பேப்பர் வந்ததும், முதல்வேலையாக அந்த அனல் கக்கும் எழுத்தை கருணாநிதி விரும்பி ரசித்து படிப்பாராம்... சிறுபான்மை மக்களுக்கு என்று இவரை ஒருகட்டத்துக்குள், வட்டத்துக்குள் அடக்கிவிட, ஒதுக்கிவிட முடியாது.. இவர் ஒட்டுமொத்த திமுகவின் சொத்து என்றே சொல்லலாம். இன்று நம்மிடம் ரகுமான்கான் இல்லையென்றாலும், அந்த பேச்சுக்கள் கங்குபோல திமுகவில் கனன்று கொண்டே இருக்கின்றன!