2020 மறக்க முடியாத கோவில் திருவிழாக்கள்... ஆன்லைனில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
2020ஆம் ஆண்டில் சித்திரை திருவிழா முதல் வைகுண்ட ஏகாதசி வரை ஆன்லைனில் சாமி தரிசனம் பார்க்க வேண்டிய நிலை பக்தர்களுக்கு வந்து விட்டது காரணம் கொரோனா.
சென்னை: கோவில் திருவிழா என்றாலே கூட்டத்தோடு கூட்டமாக போய் கடவுளை கையெடுத்து கும்பிட்டு வரம் கேட்டு வருவதுதான் நமது மக்களின் பழக்கம். கொரோனா வந்த உடன் கோவில்கள் மூடப்பட்டு சாமிக்கு தனியாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முக்கியமான திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைனில் சாமியை தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கூட்டமாக எங்கேயும் போகக் கூடாது யார் வீட்டிலும் போய் தங்கக் கூடாது, வீட்டை விட்டு வெளியே வந்தாலே மாஸ்க் போட்டுக்கொண்டுதான் வரவேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அரசு விதித்த கட்டுப்பாடுகளால் கை கால்களை கட்டிப்போட்டது போல பலரும் உணர்ந்தார். ஜாலியாக இருப்பதை விட உயிரோடு இருப்பது முக்கியம் என்பதை உணர்ந்து பலரும் வீட்டிற்குள் அடங்கி ஒடுங்கி இருந்து கொண்டனர்.
தனித்திருந்த மக்கள்
முன்பெல்லாம் 24 மணிநேர பந்த் என்றாலோ, ஊரடங்கு என்றாலோ மக்கள் பலர் தவித்து போய் விடுவார்கள். பேருந்துகள் எதுவும் இயங்காது. போக்குவரத்து இல்லாமல் வெளியே போக முடியாமல் போர் அடிக்கிறது என்று பேசுவார்கள். கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு லாக்டவுன் அறிவித்தது. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த மக்களை பல நாட்கள், மாதக்கணக்கில் வீட்டிற்குள் முடக்கிப்போட்டு விட்டது கொரோனா.
தினசரி அபிஷேகம்
சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை எல்லா கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. காலையில் கோவில் நடை திறந்து அபிஷேகம் செய்வது முதல் இரவில் பள்ளியறை பூஜை செய்வது வரை சாமிக்கு நித்ய கைங்கரியங்கள் மட்டுமே நடந்தன.
கோவில் திருவிழாக்கள் ரத்து
கோவில்களில் மாதந்தோரும் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. பங்குனி உத்திரம் திருவிழாவில் தெய்வீக திருமணங்கள் நடைபெறும். அந்த திருவிழா முதல் முறையாக ரத்தானது. சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை ஆன்லைனில் ஒளிபரப்பினர்.
சாமியை பார்க்க முடியலையே
வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி முளைக்கொட்டு, மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் வைபவம், ஆவணி அவிட்டம், புரட்டாசி மகாளய அமாவாசை, ஐப்பசி திருக்கல்யாணம், தேரோட்டம், கார்த்திகை தீப திருவிழா, மார்கழி மாதம் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி என 2020ஆம் ஆண்டு நடந்த முக்கிய திருவிழாக்களை ஆன்லைனில் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது.
அனுமதி இல்லை
கோவிலுக்கு சாதாரணமாக போய் தரிசனம் செய்த காலம் போய் கொரோனா காலத்தில் ஆன்லைனில் புக்கிங் செய்தால் மட்டுமே சாமியை பார்க்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. தளர்வுகள் அறிவித்தாலும் பலரும் வீட்டை விட்டு வெளியே போகவே பயப்பட்டனர். தனி மனித இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
வீட்டிற்குள் வழிபாடு
கொரோனா லாக்டவுனில் தேவாலயங்கள் மூடப்பட்டதால் பலரும் வீட்டிற்குள் வழிபாடு செய்தனர். மசூதிக்குள்ளும், பள்ளி வாசலுக்குள்ளும் செய்யும் தினசரி தொழுகைகளை வீட்டிற்குள் முடித்துக்கொண்டனர். ரம்ஜான் நாட்களில் கூட்டமாக தொழுகை நடத்த முடியாமல் வீட்டின் மொட்டை மாடியில் சொந்த பந்தங்களுடன் தொழுகையை முடித்துக்கொண்டனர்.
2020ஆம் ஆண்டு மறக்க முடியாது
2020 ஆம் ஆண்டில் கோவிலில் நடந்த திருவிழாக்கள் எல்லாமே நேரில் போய் பார்க்க முடியாமல் போய் விட்டதே, தேரோட்டத்தை நடத்த விடாமல் செய்து விட்டதே கொரோனா என்ற ஏக்கத்தை மக்கள் மனதில் விதைத்து விட்டு மறக்க முடியாத ஆண்டாக செய்து விட்டது கொரோனா.