சவப்பெட்டிக்குள் அசைந்த உடல்.. 2020-ஐ அலறவிட்ட ப்ரீஸர் பாக்ஸ் மரணம்.. சேலம் ஷாக்
உயிருடன் இருந்த அண்ணனை சவப்பெட்டியில் வைத்த தம்பி கைதானார்
சென்னை: சவப்பெட்டிக்குள் ஒரு உடல் அசைந்ததை கண்டு அலறியே போய்விட்டனர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.. 2020-ஐ உலுக்கிய மிக கொடுமையான சம்பவம் இதுவாகும்.. உயிருடன் ஒரு வயதானவரை சவப்பெட்டியில் வைத்த கொடுமை சேலத்தில் நடந்ததை எப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது!
சேலம் மாவட்டம் சந்தப்பட்டியில் வசித்து வந்தவர் பாலசுப்ரமணிய குமார்... இவருக்கு 78 வயது.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ரிடையர் ஆனவர்.. வயது மூப்பு காரணமாக, உடல்நிலை சரியில்லாமல் போகவும், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இவரது தம்பி பெயர் சரவணன். அவருக்கு 70 வயது! 2 மகள்கள் இருக்கிறார்கள்.. ஒருத்தர் பெயர் ஜெயா.. இன்னொருத்தர் பெயர் கீதா.. இதில், ஜெயாவுக்கு வாய் பேச முடியாது.. மற்றொரு பெண் கீதாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்திருக்கிறது.. அதனால் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை தந்து வந்துள்ளனர்.
சவப்பெட்டி
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 12-ம்தேதி பாலசுப்ரமணிய குமார் இறந்துவிட்டதாக சொல்லி சவப்பெட்டிக்கு சரவணன் ஆர்டர் தந்துள்ளார்.. அதன்படியே ஊழியர்களும் அன்றையதினமே சவப்பெட்டி தயார் ஆனது.. அதனை கொண்டு வந்து வீட்டில் வைத்துவிட்டு, மறுநாள் வருவதாக பணியாளர்கள் சொல்லி விட்டு சென்றார்கள்.. அதற்குள் உயிரோடு இருந்த அண்ணனை தூக்கி சவப்பெட்டில் வைத்துவிட்டார் தம்பி. அவரது கைகளை கயிறுகளால் இறுக்கமாக கட்டிப்போட்டார்.
அசைந்த உடல்
இதனால் அந்த குறுகிய சவப்பெட்டிக்குள் கை,காலை அசைக்க முடியாமல் பாலசுப்ரமணிய குமார் தவித்துள்ளார்.. உடலை கஷ்டப்பட்டு இங்குமங்கும் அசைத்துள்ளார்.. அவரால் பேசவும் முடியாத நிலை.. இப்படியே நாளெல்லாம் சோறு, தண்ணி இல்லாமல் தவித்து கிடந்த நிலையில்தான், சவப்பெட்டி ஊழியர்கள் மறுநாள் சொன்ன நேரத்திற்கு, பெட்டியை எடுத்து செல்ல வந்தனர்.
ஜெயா
ஆனால், சவப்பெட்டியில் உடல் அசைவதை கண்டு அலறினர்.. அருகில் சென்று பார்த்தபோதுதான், பெரியவருக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. கை, கால் அசைக்க முடியாமல், பெட்டிக்குள்ளேயே அவரது உடல் துடித்து கொண்டிருந்தது.. வாய் பேச முடியாத ஜெயா, சவப்பெட்டியை சுற்றி சுற்றி வந்து கதறி அழுததை பார்க்கவே நெஞ்சம் பதறியது.
சிகிச்சை
உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தந்தனர்.. கிட்டத்தட்ட 5 மணி நேரம் கை, கால் அசைக்க முடியாமல், பெட்டிக்குள்ளேயே கட்டிப்போடப்பட்டிருந்த அவரது உடலை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். "உங்க அண்ணனை இப்படி பாக்ஸில் படுக்க வெச்சிருக்கீங்களே, அது தப்பில்லையா? மனிதாபம் இல்லையா? என்று ஊழியர்கள் கேட்டதற்கு, "என்னய்யா சும்மா தேவையில்லாம கத்திட்டு இருக்கே.. இப்போ போயிடும் உயிர்.. கொஞ்சம் பொறு" என்று தம்பி சரவணன் சொன்ன பதில்தான் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.
உயிரிழப்பு
இதன்பிறகு சூரமங்கலம் போலீசில் புகார் தந்ததையடுத்து சரவணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.. ஆனால், சரவணன் சற்று புத்திசுவாதீனம் இல்லாதவர் என்று சொல்லப்பட்டது.. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. இதனிடையே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, பாலசுப்ரமணியகுமார் அடுத்த சில தினங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் முடியவில்லை.
அதிர்ச்சி
உண்மையிலேயே தம்பி சரவணன் புத்திசுவாதீனம் இல்லாதவரா? அலலது திட்டமிடப்பட்ட கொலையா? சொத்துக்காக இவ்வாறு செய்யப்பட்டதா? என்றெல்லாம் இன்னும் தெரியவில்லை.. சவப் பெட்டிக்குள் பாலசுப்பிரமணியம் துடிதுடித்த அந்த காட்சியே இன்னும் அகலாத நிலையில், அவரது மரணம் மேலும் நிலைகுலைய வைத்துவிட்டது.. இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நாம் கேள்விப்பட்டதும் இல்லை.. இனி யாருக்கும் இந்த கொடுமை நடக்கவும் கூடாது.. சரவணன் போன்ற மேலும் சில மனித மிருகங்கள் இன்னமும் நாட்டில் நடமாடி கொண்டுதான் இருக்கிறார்கள்!