மூச்சுக்காற்றும் விஷம்! இந்திய மக்களை நிலைகுலைய வைத்த 'லாக்டவுடன்'.. மறக்க முடியாத 2020 !
சென்னை: முதல்முறையாக உலகமே லாக்வுடன் (பொதுமுடக்கம்) என்ற வார்த்தை 2020ல் தான். இந்த ஆண்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை கொரோனா என்றால், அதற்கு அடுத்த வார்த்தை லாக்டவுன் தான். கொரோனாவை தடுக்க இந்தியாவில் போடப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட விளைவுகள் மிகவும் பயங்கரமானவை. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
எல்லா ஆண்டைப் போலத்தான் 2020ஐயும் உலகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, என அனைத்து வளர்ச்சியை வைத்தும், கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரி கொரோனாவை ஒன்றும் செய்ய முடியவில்லை,
சக மனிதனை பார்த்து பயந்தான். சகமனிதனை தொட்டால் தீட்டு, அவன் தொட்ட இடத்தை தொட்டால் தீட்டு, வீட்டைவிட்டு வெளியே சென்று வந்தால் தீட்டு, அருகில் சக மனிதன் நின்றால் தீட்டு, என நோய் பயத்தால் அவனை சுற்றியிருந்த அத்தனையையும் எதிரியாக்கியது இயற்கை.
வலிமை இழந்துவிட்டோம்.. முதல்முறையாக இந்தியாவில் பொருளாதார மந்தநிலை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
ஒன்றே கால் லட்சம் பேர்
இந்த மோசமான கொரோனா இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஒன்றே கால் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். . சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு இன்னமும் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
இபாஸ்
கொரோனாவை காரணம் காட்டி போடப்பட்ட லாக்டவுன் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்தது. பலரும் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தினர். பேருந்துகள் ஓடவில்லை. ரயில்கள் இயங்கவில்லை. விமானங்களும் பறக்கவில்லை. பக்கத்து ஊரில் உள்ளவர்கள் வந்தால் கூட பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகளை போல் பார்க்கும் நிலை இருந்தது. இபாஸ் இல்லாமல் யாரும் எங்கும் போக முடியவில்லை.
பசி பட்டினி
கொரோனாவின் கொடூரம் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மக்களைத்தான் மிக மோசமாக பாதித்தது. எல்லோரும் வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தியவர்கள். திடீரென்று வேலையில்லை. சம்பளமும் கிடைக்கவில்லை. திண்டாடிபோனார்கள். பசியும் வறுமையும் ஏற்படுத்திய பாதிப்பு சென்னையில் கொடூரமானது. நல்ல வேளையாக அரசு பசியோடு இருந்த மக்களுக்கு, மார்ச் தொடங்கி நவம்பர் மாதம் வரை இலவச அரிசியும் பருப்பும், எண்ணெய்யும் கொடுத்தது. இல்லாவிட்டால் பலர் பட்டினியால் இறந்து போய் இருப்பார்கள்.
கூலி வேலை செய்வோர் நிலை
என்னதான் அரசு அரிசி பருப்பு மற்றும் 1000 ரூபாய் பணம் கொடுத்தாலும், பசிக்கு அழும் குழந்தைக்கு பால் வாங்கவும், காய்கறிகள் வாங்கவும் வழியில்லாத நிலையை பல்லாயிரம் மக்கள் சந்தித்தார்கள். அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்கள் தான் வறுமையின் கொடுமையை அதிகம் அனுபவித்தவர்களாவர்.
கடனை கட்ட முடியவில்லை
மாத சம்பளக்காரர்கள் ஆறு மாதம் கடனை கட்ட முடியாமல் தவித்தார்கள். அரசு அறிவித்த மொரட்டோரியத்திற்கு விண்ணபித்தார்கள். ஆனாலும் எந்த பெரிய நன்மையும் இல்லை. இந்த ஆறுமாத காலத்திற்கான வட்டி கூட தள்ளுபடி செய்யப்படவில்லை. வட்டிக்கு வட்டி மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. வீட்டு வாடகை கட்ட முடியாத நிலைக்கு பல லட்சம் மக்கள் தள்ளப்பட்டனர்.
தொழில்துறைக்கு கடும் பாதிப்பு
தொழில்துறையினர் கடன் வாங்கி தொழில் செய்து வந்தார்கள். ஆறு மாத லக்டவுன் முடக்கம் அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது. கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியும் இன்னமும் அந்தபாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு பக்கம் வங்கி கடன், மறு பக்கம் வீட்டின் வறுமை, இன்னொரு பக்கம் தொழில் முடக்கம், நான்காவதாக வறுமையில் வாடும் தொழிலாளர்களின் குடும்பம் என நாலாபக்கம் சிக்கி சீரழிந்தார்கள். இவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் என்பது யானை பசிக்கு சோளப்பொறி போலத்தான் இருந்தது. சுற்றுலாத்தொழிலை நம்பி வாழ்ந்த மக்கள் கனவில் நினைத்துப்பார்க்க முடியாத துன்பத்தை அனுபவித்தனர். மொத்ததில் மக்கள் ஆறு மாதம் உயிருடன் இருந்தும் இல்லாத நிலையை அனுபவித்தார்கள், இன்றும் அதன் பாதிப்பை அனுபவித்து வருகிறார்கள்.
2021ல் எல்லாம் மாறும்
அலிபாபா நிறுவனர் ஜாக்மா சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. இந்த வருடம் நீங்கள் உயிருடன் இருப்பதே பெரும் சாதனை தான். உங்கள் கனவுளை அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். அதுதான் நிஜம். கண்ணுக்கு தெரியாத கொரோனாவில் இருந்து மீள வழியில்லாமல கண், காது, வாய், மூக்கு, கை என ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்த மக்கள் மெல்லிய புன்னகையுடன் இப்போது தான் வெளியே வர தொடங்கி உள்ளனர். 2021ல் முககவசம் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்க மருந்து கிடைக்கும் என்று நம்புவோம். அதுவரை சமூக இடைவெளியும், முககவசம் அணிவதையும் கட்டாயம் பின்பற்றுவோம். ஏனெனில் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையை விட மிக கடுமையாக இருக்கும் என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை. 2வதுஅலை மேற்கத்திய நாடுகளில் இப்போது மிக மோசமாக வேலையை காட்டி உள்ளது என்பதும் மறைக்க கூடாத உண்மை.