"இலக்கிய ராட்சசன்".. எழுத்துலகின் கம்பீரம் ஜெயகாந்தன்.. மறக்க முடியாத தமிழ்தாயின் புதல்வன்..!
ஜெயகாந்தனின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது
சென்னை: இலக்கியத்துக்காக, 'பத்மபூஷண்' விருது பெற்ற முதல் படைப்பாளி என்ற பெருமை பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமான தினம் இன்று..!
ஜெயகாந்தன்...!
பேச்சாலும் எழுத்தாலும் அனைவரையும் அதிர வைத்தவர்.. மேடை பேச்சிலோ நெருப்பு மழை, எழுத்துக்களோ சரவெடி. அரசியல், சினிமா, இலக்கியம் எதுவானாலும் அவரது தர்க்க ரீதியான பதிலடிகள் அனைத்தும் மறுவார்த்தை பேசா முத்துச்சரங்கள்...!
அன்றைய தினங்களில், பெண்களுக்காக வருந்தியவர்கள் உண்டு, அவர்களுக்காக பரிதாபப்பட்டவர்கள் உண்டு, அவர்களது துன்ப துயரங்களை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட உடல்ரீதியான வன்முறைகளை, அவர்களது இயலாமையை உணர்ச்சி பொங்க எழுதியவர்களும் உண்டு.
பாத்திரங்கள்
ஜெயகாந்தனும் எழுதினார்... ஆனால் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசம்.... அந்த வித்தியாசம்தான் அவரை இலக்கிய இமாலயத்தின் சிகரமாய் உயர்த்த வைத்தது... பிற எழுத்தாளர்கள் தங்கள் நிலையில் நின்று கொண்டு பெண்களை பார்த்தார்கள், பாத்திரங்களை படைத்தார்கள். ஆனால், ஜெயகாந்தனோ தன்னை முற்றிலும் தன்னிடமிருந்து விலக்கிகொண்டு, சம்பந்தப்பட்ட பெண் பாத்திரங்களின் நாடி, நரம்புகளில், ரத்த நாளங்களில், ஆன்மாக்களில் இரண்டற கலந்தார்.
கவுரவம்
ஜெயகாந்தனின் சிந்தனையோ அவர்களை பேச வைத்தது, அவரது வேதனை அவர்களை குமுற வைத்தது. அவரது குமுறல் அவர்களை கொந்தளிக்க வைத்தது... அவரது கொந்தளிப்பு அவர்களை வீராங்கனைகளாக்கியது, பஞ்சைகள் - பராரிகள் - பிச்சைக்காரர்கள் - கூலி தொழிலாளர்கள், விலைமாதர்கள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் ஏன் வெறுக்கப்பட்டோர் என அனைவரையும் கதை மாந்தர்களாக கௌரவித்தார்.
விசால எண்ணம்
அவர்களுக்கும் இதயம் உண்டு, நாணயமும்-நேர்மையும் உண்டு, விசால எண்ணமும், ஆழ்ந்த உணர்வும் அனைத்துக்கும் மேலாக வறுமையையும் மிஞ்சும் மனித நேயமும் உண்டு என்பதை எடுத்துக் காட்டியவர் ஜெயகாந்தன். ஏராளமான கதைகள், நாவல்கள் என இவரது படைப்பின் பிரம்மாண்டம் நீளுகிறது. அதிலும் பாரிசுக்கு போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், அந்தரங்கம் புனிதமானது போன்றவைகள் விழி அகல வைத்த காவியங்களாகி நிற்கின்றன.
நாகரீகம்
இவரிடம் யார் போய் நேரில் உட்கார்ந்து பேசினாலும், அப்படியே வாயடைத்துபோய், அவர் சொல்வதை மட்டுமே கேட்க தோன்றுமாம்.. தலைப்பு, குறிப்புகள், துவக்கவுரை, முடிவுரை, பேனா , பென்சில், பேப்பர் எதுவுமே இல்லாமல் அனல் பறக்கும் விவாதம் நடக்குமாம். இவர் பேசுவதை கேட்டாலே, ஏதோ இலக்கிய கூட்டத்துக்கு, ஆய்வுகூட்டத்துக்கு வந்துபோகும் மனஉணர்வு ஏற்படும் என்கிறார்கள்.
2 குணங்கள்
2 நல்ல குணங்களை இவர் அடிப்படையிலேயே கொண்டிருந்திருக்கிறார். ஒன்று, யாரை பற்றியும் கடைசிவரை ஜெயகாந்தன் புறங்கூறியதே இல்லை.. அதாவது, ஒருவர் இல்லாத போது அவரை பற்றி பேச மாட்டார். அப்படியே, வேறு யாராவது ஒருவர் பேசினாலும், அதை நாசூக்காக தவிர்க்கும் நாகரீக போக்கை கொண்டிருந்தவர் ஜெயகாந்தன்.. மற்றொன்று, யாரிடம் எழுத்து திறமை இருந்தாலும் அதை மனம்குளிர பாராட்டும் மனப்பான்மையை பெற்றிருந்தார்.
யாருக்காக அழுதான்
துரத்தி துரத்தி சினிமாவில் வாய்ப்பு தேடும் உலகில், ஜெயகாந்தனை தமிழ் சினிமாதான் விரட்டி விரட்டி வந்து பயன்படுத்தி கொள்ள நினைத்தது.. அப்படி வெளிவந்ததுதான், 'யாருக்காக அழுதான்', 'காவல்தெய்வம்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'எத்தனை கோணம் எத்தனை பார்வை', 'புதுச்செருப்பு கடிக்கும்' போன்ற படங்களிலும், தன் நாவலை போலவே, படைப்பின் கூர்மையை மிளிர வைத்தார்.. அதாவது, எழுத்து என்பதை ஏதோ ஒரு வகையில் நம்மை உலுக்கி எடுத்துவிடும் என்பதை உணர வைத்தவர் ஜெயகாந்தன்.
விருது
அதனால்தான், தலைசிறந்த விருதான ஞான பீடத்தை 2002-ம் ஆண்டு பெற்றார்.. 1972-ல் சாஹித்ய அகாடமி, 2009-ல் இந்திய அரசின் பத்ம பூஷன், 2011-ல் ரஷ்ய விருது போன்றவைகள் ஜெயகாந்தனை பெருமைப்படுத்தின... இதே நாள், 2015-அன்று உடல்நலக்குறைவால் சென்னையில் ஜெயகாந்தன் காலமானார். ஒருமுறை கண்ணதாசன் மேடையில் பேசும்போது, "நான் தினமும் உறங்கும்போது எனது தலையணைக்கு அடியில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு உறங்குகிறேன். அது பைபிள் என்றோ, குர்-ஆன் என்றோ, கீதை என்றோ யூகிக்க வேண்டாம். ஜெயகாந்தன் எழுதிய 'யாருக்காக அழுதான்' என்ற நாவல்தான் அது" என்றார்.
உயர்வு
புரட்சி, புதுமை, யதார்த்தம் என்றெல்லாம் பல எழுத்துகளை இன்று நாம் சொல்லி கொண்டிருந்தாலும், இவைகளை அன்றே தன் படைப்புகளில் அநாயசமாக இழைய விட்டவர் ஜெயகாந்தன்.. இவைகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பரவி விட்டு, இன்று வியாபித்து நிற்கிறது என்பதையும் மறுக்க முடியாது! ஆக மொத்தம், நாம் எங்கு இருக்கிறோமோ - எந்த துறையில் இருக்கிறோமோ - யார் மத்தியில் வாழ்கிறோமோ - அவர்களுக்காக வாழ்வது, அவர்களது உயர்வுக்காக உழைப்பது, பலனை எதிர்பாராமல் பாடுபடுவதுதான் மனிதனாய் பிறந்ததற்கு காரணம் என்ற அர்த்தத்தை புரிய வைத்தவர் ஜெயகாந்தன்...!