சென்னை உட்பட 13 நகரங்களின் கொரோனா நிலவரம் - மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஆய்வு
சென்னை: கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 13 நகரங்களின் நிலைமை குறித்து மாநகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா இன்று ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13 நகரங்களின் நிலவரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை நடத்தினார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த 13 நகரங்கள் கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த இடங்களாக கருதப்படுவதாலும், நாட்டின் கொரோனா நோயாளிகளில் 70 சதவீதம் பேர் இங்கு இருப்பதாலும் , இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
13 நகரங்களில் மும்பை, சென்னை, டெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா, ஹவுரா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகியவை அடங்கும். கொரோனா நோயாளிகளை கையாளுவதில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
நகரங்களில் பின்பற்ற வேண்டிய நிர்வாக விதிமுறைகளை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. நோய்த்தொற்று உறுதி வீதம், இறப்பு வீதம், இரட்டிப்பு வீதம், 10 லட்சம் பேருக்கு எத்தனை பேர் பரிசோதிக்கப்படுகின்றனர் போன்ற அளவீடுகள், அதிக அபாய காரணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.
கொரோனாவா என சந்தேகம்.. முஸ்லீம் நபரை அடக்கம் செய்ய எதிர்ப்பு..இந்து மயானத்தில் நடந்த இறுதி சடங்குகள்
நோயாளிகளை இணைப்பது, அவர்களின் தொடர்புகள் மற்றும் பரவல் இடங்கள் போன்ற காரணிகள் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை வரையறுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் தேவைக்கேற்ப கட்டுப்பாட்டு மண்டலங்களை நன்கு வரையறுக்கப்பட்ட சுற்றளவுடன் எல்லை நிர்ணயித்து, முடக்க கால விதிமுறைகளை அமல்படுத்த முடியும்.
குடியிருப்புகள், மாநகராட்சி வார்டுகள் அல்லது காவல் நிலைய பகுதிகள், மாநகராட்சி மண்டலங்கள், நகரங்கள் என தேவைக்கேற்ப கட்டுப்பாட்டு மண்டலங்களை மாநகராட்சிகளால் தீர்மானிக்க முடியும். பாதிப்பு பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் தொழில்நுட்ப தகவல்களுடன் தகுந்தபடி வரையறுக்க வேண்டும் என நகரங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.