கருணாநிதி ‘பேனா’ நினைவுச் சின்னம்.. தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிரடி உத்தரவு!
சென்னை : கடலுக்கு நடுவே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணிகளை போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரிக்க தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கடிதம் எழுதியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி தமிழக பொதுப் பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு “தைரியம்” இல்லை.. ராமர் யாரென கேட்ட மறுநாளே கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு - சு.சாமி
கருணாநிதி நினைவிடம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
பேனா நினைவுச் சின்னம்
இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தில் கடலுக்குள் 42 மீ உயரத்தில் பேனா நினைவுச் சின்னமும் இடம்பெற்றிருந்தது. இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கு கடற்கரை, 360 மீ தூரத்திற்கு கடலில் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்தது.
மத்திய அரசு அனுமதி
பின்னர், மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
சுற்றுச்சூழல் துறை கடிதம்
ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில் இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், இடர்பாடுகள் மதிப்பீட்டு அறிக்கை, பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை தயார் செய்து அனுப்பி வைக்குமாறு தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறைக்கு உத்தரவு
மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நான்கு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.