தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமித்ஷா.. நேரில் வரவேற்ற முதல்வர், துணை முதல்வர்!
சென்னை: பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க சென்னைக்கு தனி விமானம் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தடைந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வரவேற்றார்.
2 நாட்கள் பயணமாக வரும் அமித்ஷா டெல்லியிலிருந்து இன்று காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். மதியம் 2 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர். உடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர்.
விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து காரில் எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸுக்கு சென்றார். அப்போது வழிநெடுகிலும் அதிமுக, பாஜக தொண்டர்கள் கரகாட்டம், தாரை தப்பட்டை, செண்டை மேளம், மயிலாட்டம் என கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
சிறுமிகள் பாரதமாதா வேடமிட்டு வரவேற்றனர். வழி முழுவதும் அமித்ஷாவின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அமித்ஷா செல்லும் சாலையில் சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார். அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் எல் முருகன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
ஓட்டலில் ஓய்வு எடுக்கும் அமித்ஷா, அங்கிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். அங்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ 380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிந்ததும் லீலா பேலஸ் ஓட்டலில் தங்கும் அமித்ஷா நாளை காலை 10.15 மணிக்கு மீண்டும் டெல்லி செல்கிறார்.