விஜய்யால் பறிபோகும் எல் முருகனின் மத்திய அமைச்சர் பதவி? பிரதமர் புதிய பிளான்! பாஜகவில் ஆபரேஷன்
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஜூன் அல்லது ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கு 'கல்தா' கொடுத்துவிட்டு இன்னொருவருக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி 5 நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு கடந்த 21ம் தேதி நாடு திரும்பி உடன் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். இந்த அமைச்சரவை கூட்டம் நான்கரை மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்களின் செயல்பாடு பற்றி ஆராய்ந்தார். அதன்பிறகு ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் பற்றி விவாதித்தார்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி தனது அமைச்சரவையை மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், குஜராத், கோவா, பஞ்சாப் என்று 4 மாநில சட்டசபை தேர்தல் நடபெற உள்ளது. இதில் உத்தர பிரதேசம், குஜராத், கோவாவில் பாஜகவின் ஆட்சி உள்ளது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கும் செல்வாக்கை நிரூபிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. சமீபத்தில் ஆம்ஆத்மி கட்சியின் பஞ்சாப் ராஜ்யசபா எம்பிக்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவை மாற்றம்
இந்நிலையில் தான் இந்த 4 மாநில தேர்தல்களை மனதில் வைத்து அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாநிலங்களுக்கு கூடுதலாக அமைச்சரவையில் இடம் அளிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் ஜூன் அல்லது ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
எல் முருகனுக்கு 'கல்தா'
இந்நிலையில் தான் மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது தமிழகத்தை சேர்ந்த எல் முருகனுக்கு 'கல்தா' கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான எல் முருகன் தற்போது தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை - நாடாளுமன்ற விவகாரத்துறையின் இணை அமைச்சராக உள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வாகி உள்ள எல் முருகன் 2021ம் ஆண்டு முதல் மத்திய அமைச்சராக உள்ளார்.
எல் முருகன் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். அருந்ததியர் சமுதாயத்தின் முதல் மத்திய அமைச்சரே இவர் தான். இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழகத்தில் பாஜக வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எல் முருகனே தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்து வருகிறார்.
5 தேர்தல்களில் தொடர் தோல்வி
இவர் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவிநாசி தொகுதியில் தோல்வியடைந்தார். அதற்கு முன்பாக 2011ல் ராசிபுரம், 2012ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல், 2021ல் தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2024ல் நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் எல் முருகனிடம் மத்திய அமைச்சர் பதவியை பறிக்க பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய்யின் வருகையால் பாஜக பிளான்
அதுமட்டுமின்றி தற்போது தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே நடிகர் விஜய் முதல்வராக அரியணை ஏறியுள்ளார். அதோடு திமுக, அதிமுக படுதோல்வியடைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எல் முருகன், வானதி சீனிவாசன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்று முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசியலில் பாஜக உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால் இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக மேலிடம் நினைக்கிறது.
மாநில தலைவர் விரைவில் மாற்றம்
இதனால் விரைவில் தமிழக பாஜகவில் மாநில தலைவர் முதல் மாவட்ட தலைவர்கள் வரை பலரும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் எல் முருகனுக்கு பதில் தமிழகத்தில் இருந்து இளம் தலைவர் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications