வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு.. டிசம்பர் 26ல் நாடு தழுவிய அளவில் வங்கிகள் ஸ்ட்ரைக்!
டெல்லி: வங்கி தொழிற்சங்கங்கள் டிசம்பர் 26ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிராக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த மூன்று பொதுத்துறை வங்கிகளையும் இணைக்க அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்துதான் 9 பணியாளர் மற்றும் அலுவல தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான ஒருங்கிணைந்த வங்கி யூனியன் கூட்டமைப்பு (UFBU) வேலை நிறுத்தத்தை ஒருங்கிணைக்கிறது.
அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் இதுபற்றி கூறுகையில், அரசாங்கமும் சம்பந்தப்பட்ட வங்கிகளும் தங்கள் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளன, எனவே வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டது. 26ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.
இந்த 3 வங்கிகளும் இணைக்கப்பட்டால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றிற்கு பிறகு நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இது மாறும். ஜூன் இறுதியில், மூன்று வங்கிகளில் மொத்த வர்த்தகம் ரூ. 14.82 லட்சம் கோடியாகும்.
மூன்று வங்கிகளில், தேனா வங்கியானது பலவீனமானது. 11.04% செயல்திறன் அல்லாத சொத்துடன் (NPA)இவ்வங்கி உள்ளது. இதை வராக்கடன் என்றும் கூறலாம். பேங்க் ஆப் பரோடாவின் வராக்கடன் 5.4%, விஜயா வங்கியில் வராக்கடன் 4.10% என்ற அளவில் உள்ளது.