தமிழில் முதலில் பாடியது ஒரு படம்.. ரிலீசானது வேறு படம்! எஸ்பிபி திரைப் பயணம்.. பலரும் அறியா தகவல்கள்
சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழில் முதல் முறையாக பின்னணி பாடியது ஒரு படத்தில், ஆனால் அவர் அதன்பிறகு பின்னணி பாடிய திரைப்படம்தான் முதலில் ரிலீஸ் ஆனது.
இப்படி, எஸ்பிபி வாழ்க்கையில், திரையுலக பயணத்தில் பல சுவாரசியங்கள் உள்ளன.
படிக்கும் காலத்திலேயே பல்வேறு பாட்டுப்போட்டிகளில் பங்கேற்று வென்றவர் பாலசுப்ரமணியம். 1964ல் மெல்லிசைக் கச்சேரி குழுக்களுக்கான பாட்டுப் போட்டி ஒன்றில் பங்கேற்று முதல் பரிசை வென்றபோது, அந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்தது தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணியும் பாடகர் கண்டசாலாவும் இந்த வைரத்தை கண்டுபிடித்து பட்டை தீட்டினர்.
எஸ்.பி. கோதண்டபாணிதான் எஸ்பிபியின் குரு மற்றும் வழிகாட்டி என்றும் சொல்லலாம். எஸ்.பி.கோதண்டபாணி இசையமைத்த "ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா" என்ற தெலுங்கு படத்தில், தனது முதல் பாடலை பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இளையராஜா சேர்த்த அந்த ஒத்த எழுத்து.. "பாடும் நிலா பாலு"வை.. உலகத்துக்கே கொண்டு சேர்த்த பெருமை
முதல் படம் ரிலீஸ் ஆகவில்லை
இந்தப் படம் 1966 டிசம்பரில் வெளியான நிலையில், தமிழில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தார் எஸ்பிபி. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த 'ஹோட்டல் ரம்பா' என்ற படத்தில் பாடினார் எஸ்பிபி. எல்.ஆர். ஈஸ்வரியோடு சேர்ந்த டூயட் பாட்டு அது. 'அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு' என்று தொடங்கும் பாடல் அது. ஆனால், படம் வெளியாகவில்லை. எனவே, கன்னட படங்களில் பாட ஆரம்பித்தார் எஸ்பிபி.
ஆயிரம் நிலவே வா
ஆனால், எஸ்பி பாலசுப்பிரமணியம் தமிழில் பாடி வெளியான முதல் பாடல், எம்.ஜி.ஆர். நடிப்பில் புகழ் பெற்ற அடிமைப் பெண் என்ற படத்தில் வரும் 'ஆயிரம் நிலவே வா' என்பதுதான். ஆனால், உண்மையிலேயே, இதற்கு முன்பாக எஸ்பிபி பாடியது, சாந்தி நிலையம் என்ற படத்தில்தான். படம் ரிலீஸ் தேதி மாறுபட்டதால் வரலாற்றில், அடிமைப் பெண்தான் எஸ்பிபியின் முதல் தமிழ்ப் படம் என பதிவானது.
அடிமைப் பெண்
சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற 'இயற்கையெனும் இளைய கன்னி' பாடல்தான் முதலில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்தப் படம் 1969 மே 23ஆம் தேதி வெளியானது. அடிமைப் பெண், அதே மே மாதம், 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியானது.
உழைப்பாளர் தினத்தில் தமிழில் அவர் பாடிய படம் ரிலீஸ் ஆனதாலோ என்னவோ அதன்பிறகு அவருக்கு ஓயாத உழைப்புத்தான்.
பாட்டுதான் உயிர் மூச்சு
ஒரு கால கட்டத்தில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடும் அளவுக்கு பிஸியாக இருந்தார் எ.பி.பி. இசைஞானி இளையராஜா உட்பட பல இசையமைப்பாளர்களின் ஆஸ்தான பாடகர் இவர்தான் என கூறும் அளவுக்கு தினமும் பாடலுக்கான தேவை இருந்தது.
1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கன்னடத்தில் உபேந்திர குமார் இசையமைத்த 17 பாடல்களை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் 12 மணி நேரத்திற்குள் பாடி முடித்து சாதித்து காட்டினார்.
ஒரே நாளில் இத்தனை பாடல்கள்
தமிழ் தெலுங்கு மொழிகளில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் இசையமைப்பாளர் ஆனந்த் மற்றும் மிலிந்த் இசையில், ஒரே நாளில் 16 பாடல்களையும் பாடி சாதித்து காட்டியவர் இந்த சாதனை, ஆண் குயில். ஆனால், இன்று நீங்கா அமைதியில் நித்திரை கொள்கிறது பாடும் நிலா.