6 மாதம் ஜெயில் அல்லது ரூ 1000 அபராதம் அல்லது இரண்டும்.. 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால்!
சட்டவிரோதமாக பட்டாசு வெடித்தால் 6 மாத ஜெயில் உறுதி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் யார் பட்டாசு வெடித்தாலும் அவர்களுக்கு 6 மாத ஜெயில் உறுதி என சென்னை நகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க 2 மணி நேரம்தான் என நேரம் நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்துள்ளது.
கடும் அதிருப்தி
அதன்படி இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நேரம் அறிவிப்பு
தமிழகத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டதால், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
6 மாசம் ஜெயில்
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தீவிரமாக நடைமுறைப்படுத்த சென்னை போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். அதன்படி, முதலாவதாக, கோர்ட் அனுமதித்த நேரத்தைவிட கூடுதலான நேரத்தில் யார் பட்டாசு வெடித்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் நிச்சயம் என்றும் போலீசார் கண்டிப்புடன் கூறியுள்ளார்கள்.
ரோந்து பணி
கோர்ட்டின் இந்த உத்தரவை அமல்படுத்த அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் இது சம்பந்தமான சுற்றறிக்கையும் அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் சட்டவிரோதமாக யாரேனும் பட்டாசு வெடிக்கிறார்களா என ரோந்து பணியிலும் ஈடுபடுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.