பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை.. இந்த டோக்கன் போதும்.. தமிழக அரசு அறிவித்த அதிரடி சலுகை
சென்னை: பத்திரப் பதிவுக்கு வழங்கப்படும் டோக்கனை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்ட ஊரடங்கில், பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் மண்டலங்களுக்கு இடையே பொது போக்குவரத்தை இயக்குவதும் ஒரு முக்கியமான முடிவு ஆகும்.
தமிழகத்தில் மண்டல வாரியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கு இடையே போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்து பேருந்துகளும் இந்த மண்டலங்களுக்கு உள்ளே மட்டும் இயங்கி கொள்ளலாம். பிற மண்டலங்களுக்கு பேருந்து சேவை கிடையாது. இதேபோல பிற மண்டலங்களுக்கு, தனியார் வாகனம் அல்லது வாடகை வாகனத்தில் செல்ல வேண்டுமானால் இ-பாஸ் பெறுவது கட்டாயம் ஆகும்.
திருப்பம்.. முதல்வருடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிப்போகிறதா?
அவசர தேவைகளுக்கு பாதிப்பு
இ-பாஸ் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. மருத்துவமனை, பத்திரப்பதிவு போன்ற அவசரத் தேவைகளுக்காக செல்வோரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில்தான், கூடுதல் தலைமைச் செயலாளர், அதுல் மிஸ்ரா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
பத்திரப்பதிவு சிக்கல்கள்
இந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: மே மாதம் 31ஆம் தேதி அரசு லாக்டவுன் தொடர்பாக ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும், முழு ஊழியர்களுடன் பத்திரப்பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சார்பதிவாளர் அலுவலகம் சென்று ஆவணங்கள் பதிவு செய்வதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக, புகார்கள் வருகின்றன.
டோக்கன்தான் இ-பாஸ்
எனவே சார் பதிவு அலுவலக பத்திரப்பதிவு டோக்கனை போன்று காண்பித்து மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும். மாவட்டங்களுக்கு இடையேயான பயணமாக இருந்தாலும் சரி, பத்திரப்பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கண்டிப்பாக செல்ல வேண்டியவர்களுக்கு பத்திரபதிவு டோக்கனை இ-பாஸ் என்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தடை வேண்டாம்
பதிவுத்துறை வழங்கியுள்ள செல்லத்தக்க டோக்கன் வைத்திருக்கக்கூடிய பொதுமக்களுக்கு, போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு, ரியல் எஸ்டேட் தொழில் நடந்தால்தான் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் ஏற்படும் என்பதும், பத்திர பதிவு மூலமாக அரசுக்கு பெரும் அளவில் வருவாய் வரும் என்பதும் இது போன்ற சலுகைகள் முக்கிய காரணம் என்று அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் பத்திரப்பதிவு சிக்கல் ஏற்படாமல் தொடர்ந்து விரிவடையும் என்று எதிர்பார்க்கலாம்.