சிலைகளை தொடக் கூடாது.. ஒரு மெனு கார்டு ஒரு முறை மட்டுமே.. வெளியானது கோவில்கள், உணவகங்களுக்கு ரூல்ஸ்
சென்னை: இரண்டு மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்து, ஜூன் 8ம் தேதி திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள மத மற்றும் வணிக நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.
அன்லாக்-1 முதல் கட்ட திட்டம் ஜூன் 8 முதல் நடைமுறைக்கு வருகிறது. அப்போது மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
நாடு தழுவிய ஊரடங்கின் சமீபத்திய கட்டங்களில், அரசால் பல வணிக நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மார்ச் 25 முதல் மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதையொட்டி, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிலையான வழிகாட்டு நடைமுறை (எஸ்ஓபி) வெளியிட்டுள்ளது.
கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு.. நாளை நடைபெறவிருந்த மருத்துவர்கள், நர்சுகள் போராட்டம் வாபஸ்
கோவில்களுக்கான வழிகாட்டு நெறிமுறை
அனைத்து நுழைவு வாயில்களிலும் சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் வைக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது. அன்னதானம் வழங்கும்போது சமூக இடைவெளி விட்டு வழங்க வேண்டும். அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
குழந்தைகளுக்கு அனுமதியில்லை
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள மத வழிபாட்டு தலங்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், கட்டுக்கடங்காத ரத்தக் கொதிப்பு, பிற உடல்நிலை பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வாகனங்களில் காலணி
அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். கோவிட் -19 க்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்புகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும். காலணிகள் / பாதணிகள் சொந்த வாகனத்திற்குள் விட்டுச் செல்லப்பட வேண்டும். வளாகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் அமைந்துள்ள, கடைகள், ஸ்டால்கள், சிற்றுண்டி உணவகங்கள் போன்றவை, எல்லா நேரங்களிலும் சமூக தூர விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
6 அடி இடைவெளி அவசியம்
வரிசையை நிர்வகிப்பதற்கும், சமூக தூரத்தை உறுதி செய்வதற்கும் போதுமான தூரத்துடன், குறிப்பிட்ட அடையாளங்கள் அதாவது வட்டமிடுதல் போன்றவை செய்யலாம். வழிபாட்டு தலங்களுக்கு வருவோருக்கு தனி நுழைவு மற்றும் வெளியேறும் வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நுழைவதற்கு வரிசையில் நிற்கும்போது எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும். பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்குள் நுழைவதற்கு முன்பு, கை, கால்களை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும்.
ஹோட்டல்களுக்கான வழிகாட்டுதல்
கட்டாய கை சானிட்டைசர் டிஸ்பென்சர் மற்றும் தெர்மல் ஸ்கேனர் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். அறிகுறியற்ற ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முகக் கவசம் / முகமூடிகளைப் பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து ஊழியர்களுக்கும், கெஸ்ட்டுகளுக்கும் நுழைய அனுமதிக்க வேண்டும். ஹோட்டலுக்குள் எப்போதுமே முகக் கவசம் அணிய வேண்டும்.
கூடுதல் கையுறைகள்
சமூக தொலைதூர விதிமுறைகளை உறுதிப்படுத்த ஹோட்டல் நிர்வாகத்தால் போதுமான மனித சக்தி பயன்படுத்தப்பட வேண்டும். ஊழியர்கள் கூடுதலாக கையுறைகளை அணிய வேண்டும். மற்றும் தேவையான பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதிக ஆபத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்களும், அதாவது மூத்த ஊழியர்கள், கர்ப்பிணி ஊழியர்கள் மற்றும் அடிப்படை மருத்துவ பிரச்சினைகளை கொண்ட ஊழியர்கள், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களுடன் நேரடி தொடர்பு தேவைப்படும் எந்தவொரு முன் வரிசை வேலைக்கும் அவர்களை அமர்த்தக் கூடாது.
உணவகங்களில் எப்படி
உணவகத்தில் இருக்கைகளுக்கு இடையே போதுமான சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். ஒவ்வொருமுறையும் மாற்றம் செய்யப்படக் கூடிய மெனு கார்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றன. துணி நாப்கின்களுக்கு பதிலாக, நல்ல தரமான ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத் தக்க காகித நாப்கின்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.
டிஜிட்டல் பேமென்ட்
டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறைகளுக்கு கஸ்டமர்களை ஊக்குவிக்க வேண்டும். சமூக தொலைதூர விதிமுறைகளை பின்பற்றும் வகையில்தான் பஃபே சேவை இருக்க வேண்டும். உணவு விநியோக ஊழியர்கள் உணவு பொட்டலத்தை, விருந்தினர் அல்லது வாடிக்கையாளரின் அறை வாசலில் விட்டுவிட்டு வர வேண்டும். நேரடியாக பெறுநரிடம் ஒப்படைக்கக்கூடாது.
இடைவெளி
அறை சேவைகளின்போது, விருந்தினர்களுக்கும் உள் ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பு இண்டர்காம் / மொபைல் போன் மூலமாக இருக்க வேண்டும் மற்றும் போதுமான சமூக தூரத்தை பராமரிக்கும் போது ரூம் சர்வீஸ் சேவை (ஏதேனும் இருந்தால்) வழங்கப்பட வேண்டும். கேமிங் ஆர்கேட் / குழந்தைகள் விளையாடும் பகுதிகள் மூடப்பட்டிருக்கும்.