சென்னையை ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்களோ.. ஊரடங்கு தளர்வு.. ஒரேயடியாக சாலையில் கூட்டம் அதிகரிப்பு
சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று காலை முதல் பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மக்கள் முக கவசம் அணியாமல், அவற்றை, கழுத்தில் தொங்கவிட்டபடி நடமாடுவதையும் பார்க்க முடிகிறது.
மால்கள் தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், நகை, ஜவுளி கடை போன்ற பெரிய கடைகள் உள்ளிட்டவையும், இன்று முதல், காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்கலாம், டாக்சிகளில் 3 பேர் அமர முடியும்.
கர்நாடகாவில் முழு ஊரடங்கு: திருப்பி அனுப்பப்படும் தமிழக வாகனங்கள்.. மீறி செல்பவர்கள் மீது தடியடி
காவல் நிலையங்கள்
ஊரடங்கு உத்தரவை மீறியதாக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் உரிமையாளர்களிடம் மறுபடியும் வழங்கப்படுகிறது. எனவே அவற்றை வாங்க காவல் நிலையங்களுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள்.
டிராபிக் நெரிசல்
கடைகள், அலுவலகங்கள் திறப்பு, வங்கிகள் செயல்படுவது என பல்வேறு காரணங்களால் இன்று காலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதை பார்க்க முடிந்தது. பூந்தமல்லி ஹை ரோடு அண்ணா ஆர்ச் பகுதியில் காலையில் டிராபிக் ஜாம் ஆகி விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
போக்குவரத்து
இப்படி எல்லாம் நடக்கும் என்பதை காவல்துறை ஏற்கனவே, அறிந்து வைத்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் கண்ணன் இதுபற்றி நேற்று கூறுகையில், வாகன போக்குவரத்து என்பது திங்கள்கிழமை முதல் அதிகரிக்கும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, குறிப்பிட்ட பகுதிகளில் சிறப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்படும். ஒட்டுமொத்த டிராபிக் போலீஸ் துறையும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
மாஸ்க் அணியவில்லை
கொரோனா பரவலை திறப்பதற்கு முகக் கவசங்களை ஒழுங்காக அணிவது முக்கியம் என்று இந்த ஊரடங்கு நாட்களிலும் தமிழக அரசு தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. ஆனால், இன்றும், சென்னையில் பலரும் முகக் கவசங்களை கழுத்தில் தொங்கவிட்டபடி நடப்பதை கவனிக்க முடிந்தது. போலீசாருக்கு அச்சப்பட்டு, முகக் கவசம் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், அதை முறையாக பயன்படுத்தாமல், ஏனோதானோ என்று பயன்படுத்துகிறார்கள்.