இன்று முதல் அமலுக்கு வந்தது அன்லாக் 3.0.. இரவு ஊரடங்கு ரத்து.. கடை திறப்பு நேரம் அதிகரிப்பு
சென்னை: தமிழகம் உட்பட நாடு முழுக்க தளர்வுகளுடன் கூடிய 7வது கட்ட ஊரடங்கு (அன்லாக் 3.0), இன்று அதிகாலை 12 மணிக்கு மேல் அமலுக்கு வந்துள்ளது.
Recommended Video
மத்திய அரசின் உத்தரவையடுத்து, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. இதன்படி பள்ளிகள் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
தியேட்டர்கள் ஷாப்பிங் மால்கள் ஆகியவையும் திறக்கப்படாது. மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள்
அதே நேரம் சென்னையில் உணவகங்கள் 50 சதவீத இருக்கையுடன் வாடிக்கையாளர்களை உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கலாம். தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் முன்பு 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் இயங்கியது. அது 75 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வணிகம்
சென்னையில் அனைத்து வகையான பொருட்களையும் ஆன்லைன் நிறுவனங்கள் வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகள், இரவு 7 மணிவரை, அதாவது, கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்கலாம். கிராமங்களைப் போலவே, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு ரத்து
5ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இன்று இரவு முதல், இரவு நேர ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றாலும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இ பாஸ்
அதிகப்படியான கொரோனா வைரஸ் பாதிப்புகளை சந்தித்து வந்தாலும் பெங்களூர் கர்நாடகாவில் அனைத்து பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும், தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.