அடுத்த அதிரடி.. உன்னாவ் வன்புணர்வு வழக்கில் விசாரணை நீதிபதியை அறிவித்தது சுப்ரீம் கோர்ட்!
உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பான ஐந்து வழக்குகள் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
சென்னை: உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பான ஐந்து வழக்குகள் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை உச்ச நீதிமன்ற தற்போது வெளியிட்டுள்ளது.
உன்னாவில் நடந்த பாலியல் வன்புணர்வும் அதை தொடர்ந்த மர்ம கொலைகளும் தற்போது மிக முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் இதனால் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளார்.
2018 ஏப்ரலில் உத்தர பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வருகிறது. தற்போது இதில் உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது.
அதிர்ச்சியாக உள்ளது.. நாட்டில் என்ன நடக்கிறது? உன்னாவ் வழக்கால் வெகுண்டெழுந்த தலைமை நீதிபதி!
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.
அந்த பெண் உட்பட இரண்டு பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்தார். இதன் முடிவில் உன்னாவ் கொடூரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதோடு, 45 நாட்களில் இதில் தீர்ப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் மர்ம மரணங்கள் தொடர்பான ஐந்து வழக்குகள் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.
டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் தர்மேஷ் சர்மா நீதிபதியாக உள்ளார். இவரின் தலைமையின் கீழ்தான் இந்த 5 வழக்குகளும் இனி விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.