காமராஜர், விபிசிங், ஹெக்டே, மூப்பனார், மோடி, ரஜினி- 54 ஆண்டுகளாக அரசியலில் போணியாகாத தமிழருவி மணியன்
சென்னை: காமராஜர் தலைமையில் தொடங்கி நடிகர் ரஜினிகாந்த் தலைமையையும் ஏற்றுப் பார்த்தும் சொல்லிக் கொள்ளும்படியான எந்த ஒரு இலக்கையும் அடையாமலேயே ஓய்ந்துவிட்டது தமிழருவி மணியனின் அரசியல் வாழ்க்கை.
Recommended Video
தமிழருவி மணியன்.. இலக்கிய சிந்தனையாளர்.. பேச்சாளர்.. இதற்கு அப்பால் 54 ஆண்டுகாலம் அரசியலி'லும்' இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக 'தீவிர' அரசியலில் தன்னை காட்டிக் கொண்டார்.
1966-ம் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பெருந்தலைவர் காமராஜரால் 'தமிழருவி' என பட்டம் சூட்டப்பட்டு தமிழருவி மணியன் ஆனார். அன்று முதல் காமராஜர் தலைமையை ஏற்று காங்கிரஸ் தொண்டரானார். 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்ட போது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸில் இருந்தார் தமிழருவி.
உச்சகட்ட வெறுப்பு.. நடுரோட்டில் பேனரை கிழித்து எரித்து.. தாறுமாறாக திட்டிய ரஜினி ரசிகர்!
ஜனதா தளம், லோக்சக்தி
1975-ல் காமராஜர் மறைந்த பின்னர் ஜனதா கட்சிக்குப் போனார். 1988-ல் வி.பி.சிங்கின் ஜனதா தளம், 1997-ல் ராமகிருஷ்ண ஹெக்டேவின் லோக் சக்தி கட்சி என தாவிக் கொண்டே இருந்தார். தமிழக லோக் சக்தி கட்சியின் தலைவராகவும் இருந்தார் தமிழருவி மணியன்.
தமிழக காங்கிரஸ்
1998-ல் ஜி.கே. மூப்பனார் தலைமையை ஏற்று தமிழ் மாநில காங்கிரஸுக்கு தாவினார். 2002-ல் தமாகாவும் காங்கிரஸும் இணைந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்காரரானார் அவர். 2006-ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் (திமுக) திட்டக் கமிஷன் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார் தமிழருவி.
காங்.-க்கு முழுக்கு
2008-ல் ஈழப் பிரச்சனையை முன்வைத்து தமிழக காங்கிரஸ் கமிட்டிப் பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். 2009-ல் காந்திய மக்கள் இயக்கம் என தனி ஆவர்த்தனத்துக்கு அடிக்கல் நாட்டினார் தமிழருவியார்.
மோடிக்கு ஆதரவு
2014-ல் காந்திய மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றிய கையோடு லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான மோடியையும் ஆதரித்தார். 2016 சட்டசபை தேர்தலில் காந்திய மக்கள் இயக்க கட்சி தனித்துப் போட்டியிட்டது. பெரும்பாலான இடங்களில் இந்த கட்சி வேட்பாளர்கள் 2,000க்கும் குறைவான ஓட்டுகளை வாங்கியதால் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக முதல் முறையாக அறிவித்தார் தமிழருவி மணியன்.
ரஜினி சூப்பர்வைசர்
பின்னர் திடீரென ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறியது முதல்வர் அவருக்கு அறிவிக்கப்படாத ஆலோசகரானார் தமிழருவி. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என அறிவித்த போது அந்த கட்சிக்கு கண்காணிப்பாளர்- சூப்பர்வைசர்- மேற்பார்வையாளர் என்கிற பொறுப்பு தமிழருவி மணியனுக்கு கிடைத்தது. சில வாரங்களே இந்த பதவியில் நீடித்த தமிழருவி மணியன், இப்போது ரஜினி அரசியல் கட்சி தொடங்கவில்லை என அறிவித்த நிலையில் 2-வது முறையாக அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளார். காமராஜர் காலம் தொடங்கி ரஜினி வரை 54 ஆண்டுகால அரசியலில் தமிழருவி மணியன் ஒருபோதும் போணியானதே இல்லை என்பது பெரும் சோகம்தான்!