இறந்தும் வாழும் உயிரானாய்..உயர் வானம்போல் - கருணாநிதி சிலை திறப்பு...கவிஞர் வைரமுத்து கவிதை
சென்னை: நிலையானாய்; வடக்கைத் தீண்டும் நீட்சியுமானாய்; இன்று சிலையானாய்; சிலையெடுத்த
செல்வனை வாழ்த்து தந்தாய் என்று கருணாநிதி சிலை திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதையில் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும், முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவருமான மூத்த அரசியல் தலைவர் கருணாநிதிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சிலை திறக்கபட உள்ளது.
14 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் வெண்கலத்தில் கலைஞரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி உள்ளிட்ட கலைஞரின் 5 கட்டளைகள் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கைய நாயுடு இன்று மாலை திறந்து வைக்கிறார். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலை மாடலிலேயே இந்த சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை இரண்டு டன் எடை கொண்டது. தமிழகத்தில் தற்போது உயரமான சிலையாக கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையே உள்ளது. தற்போது கருணாநிதிக்கு அமைக்கப்பட உள்ள இந்த சிலையே உலோகத்தினால் செய்யப்படும் அதிக உயரம் கொண்ட சிலையாகும்.
இந்நிலையில், கருணாநிதியின் சிலை திறப்பு விழா குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
கலையானாய்
காவலானாய்
களத்துக்கு வேல்கள் செய்யும்
உலையானாய்;
இறந்தும் வாழும் உயிரானாய்;
உயர் வானம்போல்
நிலையானாய்;
வடக்கைத் தீண்டும்
நீட்சியுமானாய்; இன்று
சிலையானாய்;
சிலையெடுத்த
செல்வனை வாழ்த்து தந்தாய்
என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.