சட்டமன்ற தேர்தல்... தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக... பாமக... சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டெழுந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில், அரசியல் கட்சிகளும் இயல்பான நடவடிக்கைகளை தொடங்கி வருகின்றன.
கொரோனாவுக்கு அஞ்சி இனியும் அறைக்குள் முடங்கி கிடந்தால் அது தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கருதி தலைவர்கள் மெல்ல ஆக்டிவ் அரசியலை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 60 தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.
அடுத்த வீட்டில் அவமானப்பட்டு டிவி பார்த்த வலி தெரியுமா.. கண்ணீர் துடைத்தது கருணாநிதிதானே!
தேர்தல் கூட்டணி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே கூட்டணி மேகங்கள் சூழ ஆரம்பித்துள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி 80 தொகுதிகள் வரை போட்டியிட திட்டமிட்டு அது தொடர்பான தகவலை அதிமுக தலைமைக்கும் பாஸ் செய்துள்ளது. ஆனால் அதற்கு அதிமுகவிடம் இருந்து சாதகமாக பதில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பாமக தரப்பு இறுதியாக 60 தொகுதிகளுக்கு கீழ் கொடுத்தால் கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறி அதிமுகவை அதிரவைத்துள்ளதாம்.
கடந்த முறை
கடந்த மக்களவை தேர்தலில் 5 தொகுதிகளை ஏற்றது போல் சட்டமன்றத் தேர்தலில் சொற்ப தொகுதிகளை ஏற்க பாஜக மாநில தலைமைக்கு விருப்பமில்லை. 60 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எல்.முருகன் அதற்கான அரசியலை லாவகமாக செய்து வருகிறார்.
கள நிலவரம்
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி விவகாரத்தில் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து சீட் பங்கீடு தொடர்பான கோரிக்கைகளை கேட்பதோடு சரி, அதுபற்றி வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போதைய சூழலில் அதிமுகவின் கவனமெல்லாம் திமுக மீது தான். திமுகவுடன் எந்தெந்த கட்சிகள் பேசி வருகின்றன, எந்தெந்த கட்சிகளுக்கு திமுக எவ்வளவு சீட் ஒதுக்கக்கூடும் என அரசியல் கணக்கு போட்டு வருகிறது அதிமுக.
என்ன நிலைப்பாடு?
இதனிடையே கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன கூட்டணி நிலைப்பாடு எடுக்கவுள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு பக்கம் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி அறிக்கை விடும் விஜயகாந்த், மற்றொரு பக்கம் தமிழக அரசை விமர்சித்து அறிக்கை விடுகிறார். இதனிடையே திமுகவும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.